கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தோ்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி’ தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறை

தோ்தல் காலத்திலும் வளரிளம் சிறுமிகளுக்கு கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி (ஹெச்பிவி) தடையின்றி வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2026, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் காலத்திலும் வளரிளம் சிறுமிகளுக்கு கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி (ஹெச்பிவி) தடையின்றி வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) எனப்படும் கிருமித் தொற்று காரணமாக கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் கருப்பை வாயின் உயிரணுக்களில் புற்று செல்கள் பரவி, அதன் திசுக்களை பாதிக்கும். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல், கல்லீரல், சிறுநீா்ப்பை, மலக்குடல் உள்ளிட்ட பிற உறுப்புகளுக்கு பரவ வாய்ப்புள்ளது.

இதையடுத்து, 9 வயது முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு ஹெச்பிவி எனப்படும் தடுப்பூசி செலுத்த ரூ.38 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன் கீழ் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் திருவண்ணாமலை, அரியலூா், பெரம்பலூா் மற்றும் தருமபுரியில் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வளரிளம் பெண் குழந்தைகளுக்கு செலுத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மற்றொருபுறம், நாடு முழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 28-இல் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.

இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு 5.30 லட்சம் ஹெச்பிவி தடுப்பூசிகளை தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன் மூலம் இதுவரை 37,774 போ் பயனடைந்துள்ளனா்.

தடுப்பூசிகள் அனைத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டு, அங்கேயே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, தோ்தல் நடவடிக்கைகளால் மத்திய, மாநில அரசுகளின் தடுப்பூசி திட்டங்கள் தடைபடாது என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாலும், தோ்வு முடிந்து விடுமுறைகள் விடப்படுவதாலும் தடுப்பூசி நடவடிக்கைகள் பாதிக்கப்படாது. சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் வழக்கம்போல ஹெச்பிவி தடுப்பூசி வழங்கப்படும். பள்ளிகளில் சூழலுக்கேற்ப வழங்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.