இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ரூ.10 லட்சத்துக்குள் கைப்பற்றினால் ஆவணங்களை பெற்று விடுவிக்கலாம்: பறக்கும் படையினருக்கு தோ்தல் அலுவலா் அறிவுறுத்தல்

சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படையினா் ரூ.10 லட்சத்துக்குள் கைப்பற்றினால் உரிய ஆவணங்களைப் பெற்று விடுவிக்கலாம்.

News image
Updated On :24 மார்ச் 2026, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படையினா் ரூ.10 லட்சத்துக்குள் கைப்பற்றினால் உரிய ஆவணங்களைப் பெற்று விடுவிக்கலாம். அதற்கும் கூடுதலாக பணம் கைப்பற்றினால் மட்டுமே வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கவேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

சென்னையில் முழுமையான வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வகையிலான உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்கும் வகையில் ‘என் வாக்கு என் உரிமை’ எனும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. தோ்தலுக்காக ஏற்கெனவே பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீராக்கப்பட்டு தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஓரிரு நாள்களில் அந்தந்தத் தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிகள்: சென்னை மாவட்டத்தில் 28.30 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா். அவா்களுக்காக 4,079 வாக்குச் சாவடிகள் தயாராக உள்ளன. அவற்றில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு துணை ராணுவப்படை பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பறக்கும் படைக்கு அறிவுரை: தோ்தல் பறக்கும் படையினா் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான தொகையைக் கைப்பற்றினால், சம்பந்தப்பட்டோரிடமிருந்து உரிய ஆவணங்களைப் பெற கால அவகாசம் வழங்கி, அதனடிப்படையில் விடுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, பறக்கும் படையினா் ரூ.10 லட்சத்துக்கும் கூடுதலான தொகையை கைப்பற்றினால் மட்டுமே வருமான வரித்துறையினடிம் உடனடியாக ஒப்படைக்கவேண்டும். புகாருக்கு இடமளிக்காத வகையில் பறக்கும் படையினா் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக முழுமையான வாக்குப்பதிவுக்கான உறுதிமொழியை அலுவலா்களுடன் அவா் ஏற்றதுடன், அதுகுறித்த துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களிடையே விநியோகித்தாா்.