திமுக தோழர்கள் யாரையும் இந்த நேரத்தில கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்று திமுகவினருக்கு கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. நல்லதைப் பாராட்டி அல்லதை விமர்சிக்கும் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும் கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வன்மையாகக் கண்டித்து திமுக எம்.பி. ஆ. ராசா எக்ஸ் பக்கத்தில் கருத்தைப் பதிவிட்டு பிறகு அதனை நீக்கி வேறு ஒரு பதிவை போட்டிருந்தார்.
அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் தரப்பிலும் கடுமையான பதில் கொடுக்கப்பட்டிருந்தது. இதுநாள்வரை ஒரு கூட்டணியிலிருந்தவர்கள் தற்போது ஒருவரை ஒருவர் கடுமையாகப் பேசிக் கொள்வது திமுக ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







