கோவை சூலூர் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் தற்போது வரை எந்த கருத்தும் கூறவில்லை என உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிக்கு கொடுக்கப்படும் கடுமையான தண்டனை மூலம் இனிமேல் எந்த ஒரு பெண்ணுக்கும் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது, அந்த அளவிற்கு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இதுவரை, சூலூர் சம்பவத்தில், முதல்வர் அலுவலக ரீதியாகக்கூட எந்த ஒரு அறிவிப்பும் தரவில்லை. பாதிக்கப்பட்டது கஷ்டப்படும் குடும்பம் என்பதால் நிவாரண நிதி வழங்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு எங்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும். முதல்வர் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இதற்கிடையே, சிறுமியின் உடலை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிறுமியின் உடல் கூராய்வு நிறைவடைந்து, பெற்றோரிடம் ஒப்படைக்கத் தயாராக உள்ளது. ஆனால், உயிரிழந்த சிறுமியின் தாய் வழி உறவினர்கள் தமிழக முதல்வர் இந்த சம்பவம் குறித்து தற்போது வரை எந்த அறிவிப்போ, கருத்தோ கூறாமல் இருப்பதாகவும் முதல்வர் இந்த சம்பவம் குறித்த ஒரு அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே உடலை பெறுவோம் என உறுதியாகக் கூறியிருக்கிறார்கள்.
அதேவேளையில் சிறுமியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் உடலை பெற சம்மதம் தெரிவித்துள்ளதுடன் சம்பிரதாயபடி தந்தை குடும்பத்தில் தான் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்பதால் சேலம் மேட்டூர் அடுத்த குளத்தூர் பகுதியில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்வதாகவும் காவல்துறையினரிடம் சம்மதம் தெரிவித்துள்ளனர்
இரு தரப்பினர் மாறி மாறி கருத்து தெரிவித்து வருவதால் காவல்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
கோவை, சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, மே 21-ஆம் தேதி மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார்.
இரவாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இதுகுறித்து உடனடியாக சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீஸாரின் தீவிரத் தேடுதலில், கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் அந்தச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சூலூர் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பவன் குமார் ரெட்டி, சூலூர் காவல் நிலையத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினார். போலீஸார் தனிப்படை அமைத்து நடத்திய அதிரடி விசாரணையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 2 சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, தற்போது சூலூர் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வரும் கார்த்தி (வயது 33) என்பவன் சிறுமியைக் கடத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். மேலும், அவனுக்கு உதவியதாக மோகன்ராஜ் என்பவனையும் போலீஸார் பிடித்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










