
வள்ளியூர் அருகே குடிநீர் தகராறில் ஊராட்சி மன்றத் தலைவர் கொலை: குற்றவாளி கைது
வள்ளியூர் அருகே குடிநீர் தகராறில் ஊராட்சி மன்றத் தலைவர் கொலை குறித்து...

குடிநீர் தகராறில் தாக்கப்பட்டு உயிரிழந்த ஊராட்சி மன்ற தலைவர் மகராஜன்(68) - டிஎன்எஸ்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே குடிநீர் விநியோகம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கண்ணநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகராஜன் (68) தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், இசக்கி (40) என்பவரை வள்ளியூர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
கண்ணநல்லூர் ஊராட்சி தாமரைக்குளம் தெற்குத் தெருவில் வசித்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் மகராஜனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிக்கும் இடையே வெள்ளிக்கிழமை மாலை குடிநீர் விநியோகம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
ஊர் பொதுக் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது இசக்கியின் வீட்டிற்கு தண்ணீர் செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து கேட்பதற்காக மகராஜன் வீட்டிற்கு சென்ற இசக்கிக்கும், மகராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த செங்கல்லை எடுத்த இசக்கி, மகராஜனின் நெற்றியில் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
தலையில் பலத்த காயமடைந்த மகராஜனை அவரது உறவினர் சங்கர் என்பவர் உடனடியாக பரப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மகராஜன் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வள்ளியூர் காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் மகராஜனை தாக்கியதாக கூறப்படும் இசக்கியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இசக்கியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடிநீர் பிரச்னையில் தொடங்கிய வாக்குவாதம் ஊராட்சி மன்றத் தலைவரின் உயிரிழப்பில் முடிந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பில்லாத நிலை: கனிமொழி
வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் ஏற்பட்ட மோதலில், ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் மர்ம நபரால் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
குடிநீர் பிரச்னைக்காகப் போராடிய மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்டு, கொலையாளிகள் தப்பிச் செல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குழந்தைகள், பெண்கள், மக்கள் பிரதிநிதிகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலையை தவெக ஆட்சி உருவாக்கியுள்ளது.
இந்தக் கொலைக்குப் பின்னால் உள்ள காரணங்களை முழுமையாக விசாரித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
Summary
Village Panchayat President murdered in drinking water dispute near Valliyoor
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







