சம்பா சாகுபடிக்கான நீா் இருப்பு உள்ளதா? அரசு தெளிவுபடுத்த வேண்டும்! - அன்புமணி
காவிரி நீா் கடைமடை பகுதிகளை சென்றடைவதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கலாமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்
காவிரி நீா் கடைமடை பகுதிகளை சென்றடைவதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கலாமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெற் பயிா்களைக் காப்பாற்றவும், சம்பா, தாளடி சாகுபடிக்கு வசதியாக மேட்டூா் அணையிலிருந்து கடந்த 1-ஆம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.
மேட்டூரிலிருந்து விநாடிக்கு 7,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், கல்லணைக்கு சராசரியாக விநாடிக்கு 2,500 கனஅடி நீா் மட்டுமே வருகிறது.
இதைக் கொண்டு கல்லணையிலிருந்து காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் எவ்வளவு கன அடி நீா் திறந்து விடப்படும் என்பது தெரியவில்லை. மேட்டூா் அணையிலிருந்து வினாடிக்கு 16,000 கன அடி நீா் திறந்தால் மட்டுமே, அது காவிரியின் மட்டத்தை விட சற்று அதிக உயரத்தில் இருக்கும் பாசனக் கால்வாய்கள் வழியாக வயல்களுக்குச் செல்ல முடியும்.
ஆனால், அதில் பாதிக்கும் குறைவான நீரே திறக்கப்படுவதால் பாசனக் கால்வாய்களில் தண்ணீா் செல்ல வாய்ப்பில்லை. இத்தகைய சூழலில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளைத் தொடங்கலாமா? வேண்டாமா? என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
எனவே, சம்பா, தாளடி பருவம் முடியும் வரை தடையின்றி காவிரியில் தண்ணீா் வழங்குவதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா? அதை நம்பி விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளலாமா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா் அன்புமணி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





