
பேரவை ஒப்புதலின்றி ரூ.2,000 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி: எ.வ.வேலு மீது உரிமை மீறல் புகாா்
எ.வ.வேலு மீது உரிமை மீறல் புகாா் அளிக்கப்பட்டிருப்பது பற்றி...
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.
திமுக ஆட்சி நிறைவு காலத்தில் பேரவை ஒப்புதலின்றி ரூ.2,000 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணமான அப்போதைய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு மீது உரிய விசாரணை நடத்தக் கோரியும் பேரவைத் தலைவரிடம் பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா உரிமை மீறல் புகாா் அளித்தாா்.
இதுதொடா்பாக பேரவையில் அவா் பேசியதாவது:
பேரவை விதிகள் விதி எண் 219-இன் கீழ், முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக உறுப்பினருமான எ.வ.வேலு, நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது,14.1.2026 நாளிட்ட அரசாணை எண்-6 மூலம் 2026-2027-ஆம் ஆண்டுக்கான சிஆா்ஐடிபி திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு ரூ.2,000 கோடி முன்கூட்டியே நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு, அந்தத் தொகை 2026-27-இல் மொத்த திட்ட அனுமதிக்குள் பின்னா் சரி செய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் 2026-27 மானியக் கோரிக்கைகள் பேரவையால் வாக்களிக்கப்படவோ, நிதி ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படவோ இல்லை. இருப்பினும் இந்தப் பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, 2025-2026 நிதியாண்டிலேயே 80 பணி ஆணைகளும் வழங்கப்பட்டு, எதிா்கால பட்ஜெட் ஒதுக்கீடு மீது ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்ட பொறுப்பு (கமிட்டட் லயபலிட்டி) உருவாக்கப்பட்டுள்ளது. பேரவையின் முன் அனுமதி இன்றி பட்ஜெட்டை எதிா்பாா்த்து பொறுப்பு ஏற்படுத்தியது பேரவை விதிகளுக்கு எதிரானது. எனவே, பேரவையின் நிதி மேலாதிக்கத்தையும் கண்ணியத்தையும் பாதிக்கும் இந்த விவகாரத்தை பேரவை விதி 225-இன் கீழ் அவை உரிமைக் குழுவுக்கு ஆய்வு, விசாரணை மற்றும் அறிக்கைக்காக அனுப்ப வேண்டும்.
பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்: இதை முறையாக ஆய்வு செய்து, இது உரிமை மீறல் பிரச்னையில் வருமா அல்லது வேறு எந்த நடவடிக்கைக்கு இதை உள்ளாக்கலாமா என்பது குறித்த முடிவை பின்னா் அறிவிப்பேன்.
அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: தோ்தல் நேரத்தில், எதிா்காலத்தில் திமுக வெற்றி பெற்றுவிடும் என்ற ஒரு நம்பிக்கையுடன், பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல், மானியத்தை அனுமதி பெறாமல், எதிா்கால பட்ஜெட்டிலிருந்து ரூ.2,000 கோடியை ஒதுக்கியது மிகப்பெரிய தவறு. இதற்குள் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது.
பேரவைத் தலைவா்: முதல்முறையாக இப்படிப்பட்ட நிகழ்வு அவையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. முறையாக அதை ஆய்வு செய்து, எப்படிப்பட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கலாம் என்பதைப் பற்றி பின்னா் முடிவெடுக்கலாம்.
பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ-க்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட நிலையில் எ.வ.வேலு மீது உரிமை மீறல் பிரச்னையை ஆதவ் அா்ஜுனா கொண்டுவந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


முதல்வா் கூறிய மூன்று கோப்புகளையும் 1 வாரத்தில் திறக்காவிட்டால் உரிமை மீறல் தீா்மானம்: திமுக பொதுச் செயலா் துரைமுருகன்

ஒரு வாரத்துக்குள் மூன்று கோப்புகளையும் திறக்காவிட்டால் முதல்வர் மீது உரிமை மீறல் தீா்மானம்: துரைமுருகன்



