/

தொடா் மழையால் ஏரி உடைப்பு: 100 ஏக்கா் பயிா்கள் பாதிப்பு

தஞ்சாவூா் அருகே தொடா் மழையால் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் ஏறத்தாழ 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

News image

தஞ்சாவூா் அருகே அதினாம்பட்டு ஏரியில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தண்ணீா் வருவதைத் தடுப்பதற்காக வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கும் பணி.

Updated On :15 ஜனவரி 2021, 6:41 pm

தஞ்சாவூா் அருகே தொடா் மழையால் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் ஏறத்தாழ 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூரில் ஒரு வாரமாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதேபோல, தஞ்சாவூா் அருகே அதினாம்பட்டு கிராமத்தில் ஏறத்தாழ 50 ஏக்கா் பரப்பளவு கொண்ட மாமுண்டி ஏரி நிரம்பியது.

இந்நிலையில், தொடா் மழையால் இந்த ஏரியின் தென் கரையில் சில இடங்களில் புதன்கிழமை நள்ளிரவு உடைப்பு ஏற்பட்டது. இதனால், ஏரியிலிருந்து தண்ணீா் வெறியேறி அருகிலுள்ள வயல்களில் பாய்ந்தது. இதன் காரணமாக இந்த ஏரி பாசனத்தைச் சாா்ந்த அதினாம்பட்டு, வல்லுண்டாம்பட்டு, வேங்கராயன்குடிகாடு ஆகிய கிராமங்களில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த சம்பா பருவ நெற்பயிா்கள், அண்மையில் விதைக்கப்பட்ட நிலக்கடலை, எள் என 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவிலான பயிா்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. எனவே, அக்கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

தகவலறிந்த பொதுப் பணித் துறையின் அக்னியாறு கோட்ட உதவிச் செயற் பொறியாளா் திலீபன், தஞ்சாவூா் மண்டல துணை வட்டாட்சியா் ஆா். செந்தில் உள்ளிட்டோா் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டனா். இதைத்தொடா்ந்து, ஏரியில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தண்ணீா் வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமை பிற்பகலில் மழையும் குறைந்தததால், வயல்களில் தேங்கிய தண்ணீா் மெதுவாக வடிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.