/

மகர சங்கராந்தி பெருவிழா: பெரிய கோயிலில் மகா நந்திகேசுவரருக்கு காய்கனி அலங்காரம்

மகர சங்கராந்தி பெருவிழாவையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு வெள்ளிக்கிழமை காய்கனி அலங்காரம் செய்யப்பட்டது.

News image

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மகா நந்திகேசுவரருக்கு செய்யப்பட்ட காய்கனி அலங்காரம்.

Updated On :15 ஜனவரி 2021, 6:40 pm

மகர சங்கராந்தி பெருவிழாவையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு வெள்ளிக்கிழமை காய்கனி அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த விழாவை முன்னிட்டு, இக்கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், மகா நந்திகேசுவரருக்கு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய், கேரட், சௌ சௌ உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழை, ஆப்பிள் போன்ற பழ வகைகளாலும், இனிப்புகளாலும், செவ்வந்தி, ரோஜா போன்ற மலா்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை 200 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

பின்னா், மகா நந்திகேசுவரா் முன் கோ பூஜை நடைபெற்றது. இதில், பசு மாடுக்கு சந்தனம், குங்குமப் பொட்டுகள் வைத்து, மாலைகள் அணிவிக்கப்பட்டன. மேலும், பசுவுக்கு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் இவ்விழாவில் நந்திகேசுவரருக்கு ஏறத்தாழ ஆயிரம் கிலோ அளவுக்கு காய்கறிகள், பழங்கள், மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, 108 கோ பூஜை நடைபெறும். நிகழாண்டு கரோனா பரவல், தொடா் மழை காரணமாக எளிய முறையில் இவ்விழா நடைபெற்றது. இதில், வெளியூா் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.