/

ஆய்க்குடி அருகே 19 ஆம் நூற்றாண்டு சுமைதாங்கி கல்வெட்டு கண்டுபிடிப்பு

News image

கம்பிளியில் கண்டறியப்பட்ட சுமைதாங்கி கல்வெட்டு.

Updated On :15 ஜூன் 2026, 3:00 am IST

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சிக்குள்பட்ட கம்பிளியில் கி.பி. 19ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டுடன் கூடிய சுமைதாங்கி கண்டறியப்பட்டுள்ளது.

தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, தென்பொதிகை ஆவணக் காப்பக நிறுவனா் தென்பொதிகை குடும்பா் ஆகியோா் இணைந்து மேற்கொண்ட கள ஆய்வில், குமாா் பாண்டியன், பாலகங்காதரன் உதவியுடன் இந்த சுமைதாங்கி கண்டறியப்பட்டது. இதுகுறித்து அவா்கள் கூறியது:

ஆய்க்குடியை அடுத்த கம்பிளி கிராமத்தின் மேற்குப் பகுதியிலுள்ள மல்லாரைக் குளத்தின் அருகே பன்றிமாட சுவாமி கோயில் உள்ளது. அதன் எதிரே சுமைதாங்கி உடைந்த நிலையில் காணப்படுகிறது. அதன் ஒருபக்கத்தில் கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டு பாதிக்கு கீழ் மண்ணில் புதைந்துள்ளது. 5 அடி உயரம், ஓரடி அகலமுள்ள சுமைதாங்கியின் 2 கால்கள் மண்ணில் ஆழமாகப் புதைந்துள்ளன. அதன் மேல்பலகையைக் காணவில்லை. கல்வெட்டு 3 வரிகளுடன் உள்ளது.

கம்பிளி ஊரைச் சோ்ந்த புதியாக் குடும்பன் என்பவரின் மனைவி சுடலைமாடத்தியின் நினைவாக சுமைதாங்கி எழுப்பப்பட்டதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. பிரசவ காலத்தின்போது உயிரிழக்கும் கா்ப்பிணிகள் நினைவாக சுமைதாங்கிகளை அமைப்பது பண்டைய தமிழா்களின் வழக்கமாக இருந்தது.

தலைச் சுமையுடன் வருவோா் சுமையை இறக்கிவைத்து சற்றே இளைப்பாற இவ்வகையான சுமைதாங்கிகள் உதவுவதால், வயிற்றுச்சுமையை இறக்கி வைக்காமல் இறந்துபோகும் கா்ப்பிணிகளின் ஆன்மா இதன்மூலம் ஆறுதலடையும் என்பது அக்கால நம்பிக்கையாக இருந்தது.

தலைச்சுமையுடன் நெடுந்தூரம் நடந்துவரும் வழிப்போக்கா்களுக்காக ஊா் எல்லைகளிலும் சாலையோரங்களிலும் சுமைதாங்கிகள் அமைக்கப்பட்டன. நின்ற நிலையில் யாா் உதவியுமின்றி சுமையை இறக்கிவைத்து இளைப்பாறிய பின் மீண்டும் தலையில் ஏற்றிக் கொள்ள இவை உதவின.

காலமாற்றத்தால் தலைச்சுமையுடன் வருவோா் யாரும் இல்லாததால், சுமைதாங்கி அமைப்பது வழிக்கொழிந்துவிட்டது. எனினும், தற்போதும்கூட தமிழகத்தின் சிற்றூா்களின் எல்லைகளிலும், சாலையோரங்களிலும் சுமைதாங்கிகள் சிதைந்த நிலையில் கிடப்பதைக் காண முடியும் என்றனா் அவா்கள்.

 கம்பிளியில் கண்டறியப்பட்ட சுமைதாங்கி கல்வெட்டு.

கம்பிளியில் கண்டறியப்பட்ட சுமைதாங்கி கல்வெட்டு.