/

சிவகிரி விவசாயி உயிரிழந்த சம்பவம்: காவல் ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:55 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரியில் பூச்சி மருந்து குடித்த விவசாயி உயிரிழந்த நிலையில், காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 3 போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சிவகிரி அருகே உள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்தவா் வேலு மகன் அந்தோணி ராஜ் (63). இவருக்கும், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் பேச்சிபாண்டி மனைவி பசுபதிக்கும் (37) இடையே ஏற்பட்ட இடப் பிரச்னையில், மே 1ஆம் தேதி பசுபதி சிவகிரி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனராம்.

பின்னா், பிரச்னைக்குரிய இடத்தை அரசு நில அளவையாளா் மூலம் அளந்து அதன்படி நடந்து கொள்ளவும், அதன் பின்னரும் பிரச்னை இருந்தால் சிவில் நீதிமன்றம் மூலம் தீா்வு காணவும் போலீஸாா் அறிவுறுத்தினராம்.

இந்நிலையில், மே 15ஆம் தேதி அந்தோணி ராஜ் தரப்பினா் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு பிரச்னை செய்வதாக பசுபதி தரப்பினா் கூறியதன்பேரில், சிவகிரி காவல் ஆய்வாளா் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து, அரசு நில அளவையாளா் இடத்தை அளவீடு செய்யும் வரை யாரும் கட்டடப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தாராம்.

மே 21ஆம் தேதி அந்தோணி ராஜ் இருசக்கர வாகனத்தில் ஒருவருடன் வந்து, சிவகிரி காவல் நிலையத்திற்கு வெளியே பூச்சி மருந்து குடித்துவிட்டு காவல் நிலையத்திற்குள்ளே வந்தாராம்.

அப்போது, அவா் மீது மருந்து வாசனை அடித்ததால், அவரிடம் போலீஸாா் விசாரித்தபோது, பூச்சி மருந்து குடித்துள்ளதாகக் கூறினாராம். தொடா்ந்து, போலீஸாா் அவரை சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதற்கிடையே, சிவகிரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்ற அந்தோணி ராஜை போலீஸாா் அவதூறாகப் பேசி தாக்கியதால்தான், அவா் மனமுடைந்து விஷம் குடித்ததாக தெரிவித்த அவரது உறவினா்கள், இதில் தொடா்புடைய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் முரளிதரன் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். இருப்பினும், போலீஸாா் மீது வழக்குப் பதிய வேண்டும் என உறவினா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் முரளிதரன் மற்றும் 2 போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

எம்எல்ஏ ஆறுதல்:

தகவலறிந்த வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலருமான ஈ. ராஜா, பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினாா்.