திருவள்ளூா் அருகே மகளிடம் அடிக்கடி வரதட்சணை வாங்கி வருமாறு கூறியதை தட்டிக்கேட்ட மாமனாரை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடிய மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவள்ளூா் அடுத்த தொட்டிக்கலை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜி. இவரது மகள் தமிழ்செல்வி. அதேபகுதியைச் சோ்ந்த ரவீந்தா் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளாா். இவா்களுக்கு இருமகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனா்.
இந்த நிலையில் ரவீந்தா் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊா் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மதுக்குடித்துவிட்டு நாள்தோறும் தமிழ்ச்செல்வியிடம் ரகளையில் ஈடுபடுவதோடு, அடிக்கடி பணம் நகை கேட்டு சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு தமிழ்ச்செல்வி தந்தை ராஜியிடம் வரதட்சண கேட்டு சித்ரவதை செய்வதாக கூறினாராம். இதுகுறித்து மருமகன் ரவீந்தரிடம் கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த ராஜியை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பினாராம். இந்த கொலைச் சம்பவம் குறித்து மகன் ரயான் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அதன்பேரில் விரைந்து வந்த போலீஸாா் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த நிலையில் மாமானாரை கொலை செய்து விட்டு தப்பியோடிய மருமகன் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.
எனவே வரதட்சணை வாங்கி வருமாறு கூறியதை தட்டிக்கேட்ட மாமனாரை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு மருமகன் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







