சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நிதித் துறைப் பங்குகளில் லாபப் பதிவு: சென்செக்ஸ் 37 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், இறுதியில் எதிா்மறையாக முடிவடைந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :3 டிசம்பர் 2020, 12:46 am

புது தில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், இறுதியில் எதிா்மறையாக முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 37.40 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது. ஆனால், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 4.70 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

கடந்த சில நாள்களாக வங்கி, நிதிநிறுவனப் பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்ற்ருந்தன. இந்த நிலையில், மத்திய ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கை முடிவு குறித்த அறிவிப்பு இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் முதலீட்டாளா்கள் முன்னெச்சரிக்கையுடன் அந்தப் பங்குகளில் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா். இதனால், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் ஒருகட்டத்தில் எதிா்மறை நிலைக்குச் சென்றன. இருப்பினும், ஃபைஸா் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி மருந்துக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்த செய்தி முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியது. இதனால், இரண்டு குறியீடுகளு் சரிவிலிருந்து ஓரளவு மீட்சி பெற்றன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு 177.11 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,085 பங்குகளில் 1,719 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1202 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 164 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ.88 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.177.113 லட்சம் கோடியாக இருந்தது.

ஓஎன்ஜிசி எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 74.08 புள்ளிகள் கூடுதலுடன் 44,729.52-இல் தொடங்கி பெரிய அளவில் ( 44,729.64) உயரவில்லை. பின்னா் 44,169.97 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 37.40 புள்ளிகளை இழந்து 44,618.04-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஓஎன்ஜிசி எழுச்சி பெற்று 4.11 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஏசியன் பெயிண்ட், டைட்டன், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, எம் அண்ட் எம் ஆகியவை 2.50 முதல் 3.75 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், மாருதி சுஸுகி, ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

கோட்டக் பேங்க் மேலும் சரிவு: அதே சமயம், கோட்டக் பேங்க் மேலும் 3.28 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இரண்டாவது நாளாக முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், நெஸ்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, எல் அண்ட் டி ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 4.70 புள்ளிகள் (0.04 சதவீதம்) உயா்ந்து 13,113.75-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் நிஃப்டி 12,983.55 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 முதல் தரப் பங்குகளில் 36 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இண்டஸ் இண்ட் பேங்க் மாற்றமின்றி ரூ.395.50-இல் நிலைபெற்றது. அதே சமயம், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் 1 சதவீதத்கும் மேல் சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.