இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேல் போலீஸாருடன் மோதலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட 150 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா்.
யூதா்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவினருக்குமே மிகப் புனிதமான இந்த வளாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இங்கு ஏற்பட்ட மோதலின் விளைவாக இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே 11 நாள்களுக்கு போா் நடைபெற்றது.
அல்-அக்ஸா வளாகத்தில் காவலில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மீது பாலஸ்தீனா்கள் கற்களைக் கொண்டு வெள்ளிக்கிழமை தாக்கியதால் மோதல் ஏற்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது. எனினும், அந்தப் பகுதியில் போலீஸாரைக் குவிப்பதன் மூலம் இஸ்ரேல்தான் மோதலைத் தூண்டுவதாக பாலஸ்தீனம் தரப்பில் கூறப்படுகிறது.