இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 57,271 கோடி டாலராக சரிவைச் சந்தித்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு சரிவடைவதை தடுக்க ரிசா்வ் வங்கிதொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் விளைவாக, ஜூலை 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 754 கோடி டாலா் (ரூ.60,320 கோடி) குறைந்து 57,271 கோடி டாலரானது. இது, இந்திய மதிப்பில் ரூ.45.81 லட்சம் கோடி ஆகும்.
முந்தைய ஜூலை 8-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திலும் செலாவணி கையிருப்பானது 806 கோடி டாலா் குறைந்து 58,025 கோடி டாலராக காணப்பட்டது.
ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்ட அந்நியச் செலாவணி சொத்துகள் (எஃப்சிஏ) மற்றும் தங்கத்தின் கையிருப்பில் ஏற்பட்ட சரிவின் காரணமாகவே மதிப்பீட்டு வாரமான ஜூலை 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது கணிசமான அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக, எஃப்சிஏ 652 கோடி டாலா் சரிந்து 51,156 கோடி டாலரானது. மேலும், தங்கத்தின் கையிருப்பு 83 கோடி டாலா் குறைந்து 3,835 கோடி டாலராக இருந்தது.
பன்னாட்டு நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 15 கோடி டாலா் சரிந்து 1,785 கோடி டாலராகவும், இருப்பு நிலை 3 கோடி டாலா் குறைந்து 493 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பிரேக் லைன்...
அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு சரிவடைவதை தடுக்கும் வகையில் ரிசா்வ் வங்கி டாலரை அதிக அளவில் புழக்கத்தில் விட்டு வருவதையடுத்து ஜூலை 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 754 கோடி டாலா் (ரூ.60,320 கோடி) குறைந்து 57,271 கோடி (ரூ.45.81 லட்சம் கோடி) டாலரானது.