பைஜூஸ் நிறுவனத்தில் 2,500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக குரல் கொடுத்துள்ள பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பைஜூஸ் நிறுவனம் இணையவழிக் கல்வி சேவையை வழங்கி வருகிறது.
இதனிடையே கடந்த சில ஆண்டுகளில் இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வந்தது. பைஜூஸ் நிறுவனத்தை லாபகரமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஊதியத் தொகையை ஈடுகட்டும் வகையில், 2,500 பேரை பணிநீக்கம் செய்வதாகவும் அந்நிறுவனம அறிவித்தது.
இந்நிலையில், பைஜூஸ் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக லிங்க்ட்இன்-னில் அவர் பதிவிட்டுள்ளார்.
ஒரு நிறுவனத்தை உருவாக்குவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. ஒரு நிறுவனத்திலிருந்து 2,500 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள செய்தி ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது. நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் திரும்ப பிரார்த்தனை செய்கிறேன்.
கடந்த நில நாள்களாக சிறு, குறு தொழில் தொடங்குவதற்கான நிதித்திரட்டல் அதிகரித்து வருகிறது. இந்திய மக்கள் தொகை மற்றும் இலக்கு ஆகிய இரண்டும், தொழில் துறையில் புதிய வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் உருவாக்கும்.
அத்தகைய ஆரம்பகட்டத்தைத் தொடங்க இது சிறந்த தருணம். சில செயல்பாட்டுக் கொள்கைகளுடன் சிறு மற்றும் நடுத்தர தொழில்களைத் தொடங்கலாம். வளர்ச்சியைக் காணவில்லை என்றாலும், உயிர் பிழைத்திருக்கும் மனநிலைக்கு மாற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பைஜூஸ் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல் சுனில் ஷெட்டி இதனைத் தெரிவித்துள்ளார்.