இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் "காளை' ஆதிக்கம் தொடர்ந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 152 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி, பின்னர் சற்று தள்ளாட்டம் கண்டது. அதன் பிறகு, காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது. குறிப்பாக, அதிகத் திறன் கொண்ட, ஐடிசி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்து வரவேற்பு காரணமாக சந்தை மூன்றாவது நாளாக நேர்மறையாக முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.63 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.316.64 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.3,367.67 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
3-ஆவது நாளாக எழுச்சி: காலையில் 43.46 புள்ளிகள் கூடுதலுடன் 65,671.60-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,601.47 வரை கீழே சென்றது.
பின்னர், அதிகபட்சமாக 65,831.70 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 152.12 புள்ளிகள் (0.23 சதவீதம்) கூடுதலுடன் 65,780.26-இல் முடிவடைந்தது.
18 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 18 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,151 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 904 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 33 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 46 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 51முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 35.85 புள்ளிகள் கூடுதலுடன் 19,564.65-இல் தொடங்கி, 19, 525.75 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 19,587.05 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 46.10 புள்ளிகள் (0.24 சதவீதம்) கூடுதலுடன் 19,574.90-இல் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.