உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்
இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிட்டெட் (சிபிசிஎல்), கடந்த நிதியாண்டில் அதிகபட்ச உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் நிறுவனம் 1.16 கோடி மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்துள்ளது. இது, நிறுவனத்தின் அதிகபட்ச வருடாந்திர உற்பத்தியாகும். இதற்கு முன்னா் கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் உற்பத்தியான 1.13 கோடி மெட்ரிக் டன்னே அதிகபட்ச உற்பத்தியாக இருந்தது.
கடந்த மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.20,823 கோடியாகக் குறைந்தது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.21,350 கோடியாக இருந்தது. 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.79,272 கோடியாகக் குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் அது ரூ.90,908 கோடியாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.