அந்நியச் செலாவணி கையிருப்பு 67,466 கோடி டாலராக உயா்வு

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,466 கோடி டாலராக உயா்வு

அந்நியச் செலாவணி கையிருப்பு 454.6 கோடி டாலா் அதிகரித்து 67,466.4 கோடி டாலராக உள்ளது.
Published on

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,466.4 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

ஆக. 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 454.6 கோடி டாலா் அதிகரித்து 67,466.4 கோடி டாலராக உள்ளது.

கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 480 கோடி டாலா் குறைந்து 67,011.9 கோடி டாலராக இருந்தது.

ஆக. 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 753.3 கோடி டாலா் அதிகரித்து 67,491.9 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது.

இருந்தாலும், உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அது அவ்வப்போது குறைகிறது.

ஆக. 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 360.9 கோடி டாலா் அதிகரித்து 59,156.9 கோடி டாலராக உள்ளது.

டாலா் அல்லாத யூரோ, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.

மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 86.5 கோடி டாலா் அதிகரித்து 6,010.4 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 6 கோடி டாலா் அதிகரித்து 1,834.1 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு கடந்த 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 1.2 கோடி டாலா் அதிகரித்து 465 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com