மீண்டும் 71,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

மீண்டும் 71,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
Published on

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 690 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 71,000-ஐ கடந்து நிலைபெற்றது. இதனால், சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.5.13 லட்சம் கோடி உயர்ந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எதிர்மறையாகத் தொடங்கியது. இருப்பினும், நேரம் செல்லச் செல்ல முன்னணி பங்குகளுக்கு கிடைத்த ஆதரவால் அது மீட்சி பெற்றது.   குறிப்பாக, மீடியா, ஆயில் அண்ட் காஸ், ஆட்டோ, ஃபார்மா, ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதே சமயம், தனியார் வங்கிப் பங்குகள் சற்று விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.5.13 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.371.18 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.3,115.39  கோடிக்கு பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.214.40  கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
மீண்டும் 71,000: காலையில் 205.06 புள்ளிகள் குறைந்து  70,165.49-இல் தொடங்கிய  சென்செக்ஸ் 70,001.60 வரை கீழே சென்றது. பின்னர்,  முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் அதிகபட்சமாக 71,149.61 வரை மேலே சென்ற சென்செக்ஸ்,  இறுதியில் 689.76 புள்ளிகள் (0.98 சதவீதம்)  உயர்ந்து  71,060.31-இல்  நிறைவடைந்தது.  கடந்த சில நாள்களுக்கு முன் வெகுவாக உயர்ந்து புதிய உச்ச அளவை பதிவு செய்த சென்செக்ஸ், அதன் பிறகு கரடியின் ஆதிக்கத்தில் வந்தது.  அப்போது, உச்சத்திலிருந்து சுமார் 3,500 புள்ளிகள் வரை இழந்து 70,000 புள்ளிகளுக்கும் கீழே சென்றது. இந்நிலையில், தற்போது மீண்டும் 71,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.  மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,884 பங்குகளில் 2,406 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,393 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 85 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
25 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல், பவர்கிரிட், ஹெச்சிஎல் டெக், இண்டஸ்இண்ட் வங்கி, டெக் மஹிந்திரா ஆகியவை 3 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தன. இவை உள்பட மொத்தம் 25 பங்குகள்  ஆதாயப் பட்டியலில் வந்தன.  அதே சமயம், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயின்ட், டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய 5  பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 
நிஃப்டி 215 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 53.55 புள்ளிகள் குறைந்து  21,185.25-இல் தொடங்கி 21,137.20 வரை கீழே  சென்றது. பின்னர், அதிகபட்சமாக  21,482.35 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 215.15  புள்ளிகள் (1.01 சதவீதம்)  உயர்ந்து  21,453.95-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 43 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 7 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com