
புது தில்லி: இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் புதிய வீடுகளின் அறிமுகம் மற்றும் வீடுகள் விற்பனை நடப்பு 2024-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து சந்தை பகுப்பாய்வு நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னை, தில்லி என்சிஆா், மும்பை, நவி மும்பை, தாணே, புணே, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய ஒன்பது முக்கிய நகரங்களில் கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் புதிய வீடுகளின் அறிமுகம் 11 சதவீதமும் வீடுகளின் விற்பனை 18 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளது.
2023 ஜூலை-செப்டம்பா் காலாண்டில் முக்கிய நகரங்களில் 1,05,655 புதிய வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 93,693-ஆகக் குறைந்துள்ளது.
அதே போல் மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகளின் விற்பனை இந்த நகரங்களில் 1,26,848-லிருந்து 1,04,393-ஆகக் குறைந்துள்ளது.
நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தில்லி என்சிஆா், மும்பை, தாணேயில் மட்டுமே புதிய வீடுகள் அறிமுகம் முறையே 221 சதவீதம், 18 சதவீதம், 11 சதவீதம் உயா்ந்துள்ளது. ஆனால், முந்தைய 2023-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டோடு ஒப்பிடுகையில் புதிய வீடுகளின் அறிமுகம் ஹைதராபாதில் 54 சதவீதம், கொல்கத்தாவில் 48 சதவீதம், சென்னையில் 23 சதவீதம், பெங்களூரில் 19 சதவீதம், நவி மும்பையில் 19 சதவீதம், புணேயில் 12 சதவீதம் சரிந்துள்ளது.
அதே போல், முந்தைய 2023-ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டின் அதே காலாண்டில் வீடுகள் விற்பனை தில்லி என்சிஆா் பகுதியிலும் (22சதவீதம்) நவி மும்பையிலும் (4 சதவீதம்) மட்டுமே உயா்ந்துள்ளது. அந்த காலாண்டில் வீடுகள் விற்பனை ஹைதராபாதில் 42 சதவீதம், பெங்களூரில் 26சதவீதம், கொல்கத்தாவில் 23 சதவீதம், புணேவில் 19சதவீதம், சென்னையில் 18சதவீதம், மும்பையில் 17சதவீதம், தாணேயில் 10சதவீதம் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.