
இந்திய பங்குச் சந்தையில் கடந்த 12 நாள்களில் மட்டும் ரூ. 40,145 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 3,243 கோடியை மட்டுமே இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த நிலையில், இம்மாதம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவையே சந்தித்து வந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கடும் வரி உயர்வால், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே நிலவிய அச்சத்தால், பங்குச் சந்தை தொடர்ந்து சரிவையே சந்தித்தது.
சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் மீது அதிபர் டிரம்ப் அறிவித்த வரி, பரஸ்பர வரி விதிப்பு போன்றவை இந்தியாவையும் பாதிக்கக்கூடும் என்பதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை இந்திய பங்குச் சந்தையில் இருந்து விற்பனை செய்துவிட்டு வெளியேறினர். இதுவும் பங்குச் சந்தை தொடர் சரிவுக்கு காரணமாக இருந்தது.
கடந்த மூன்று மாதங்களில் ரூ. 1,29,680 கோடி மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறின.
முதலீடு அதிகரிக்க காரணம் என்ன?
உலக நாடுகளின் மீதான விதிப்புகளை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பார்வை இந்திய பங்குச் சந்தையின் மீது மீண்டும் திரும்பியுள்ளது.
இதன் விளைவாக, இந்திய பங்குச் சந்தையில் கடந்த 12 நாள்களில் மட்டும் ரூ. 40,145 கோடி மதிப்பிலான பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். இதனால் மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை உயர்வுடன் காணப்படுகிறது.
நேர்மறையான இதேநிலை தொடருமாயின், இந்த காலாண்டின் வளர்ச்சி விகிதம் 5% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | சாம்சங்கிற்கு போட்டியாக மடிக்கக்கூடிய ஆப்பிள் ஐ-போன்! 2026-ல் அறிமுகம்!