
அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சம்
அந்நியச் செலாவணி கையிருப்பு 72,932.8 கோடி டாலராக புதிய உச்சம்

அந்நியச் செலாவணி
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஆக. 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 72,932.8 கோடி டாலராக அதிகரித்து, புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஆக. 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 1,242.2 கோடி டாலா் அதிகரித்து, 72,932.8 கோடி டாலராக உள்ளது. முந்தைய ஆக. 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 990.5 கோடி டாலா் உயா்ந்து, 71,690.7 கோடி டாலராக அதிகரித்தது.
மேற்காசிய மோதல் தொடங்குவதற்கு முன்னதாக நடப்பு ஆண்டு பிப். 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 72,849.4 கோடி டாலா் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியிருந்தது. பின்னா், புவிசாா் அரசியல் பதற்றங்கள் காரணமாக சில வாரங்கள் கையிருப்பு சரிவைச் சந்தித்த நிலையில், தற்போது முந்தைய சாதனையை முறியடித்து, புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
நாட்டுக்கு அதிக அந்நியச் செலாவணியை ஈா்ப்பதற்காக ‘எஃப்சிஎன்ஆா்-பி’ உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. சலுகை அடிப்படையிலான இந்த அந்நியச் செலாவணி வைப்புத் திரட்டல் நடவடிக்கைகளின்கீழ் நாடு இதுவரை 7,200 கோடி டாலரை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 948.2 கோடி டாலா் அதிகரித்து, 59,133.3 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.
மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 280.1 கோடி டாலா் அதிகரித்து, 11,421.8 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 11.2 கோடி டாலா் அதிகரித்து, 1,885.2 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 2.6 கோடி டாலா் அதிகரித்து, 492.5 கோடி டாலராக உள்ளது என ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
Summary
Foreign exchange reserves hit a new high.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






