‘வரும் 2028-க்குள் இந்தியாவில் தனது இருசக்கர வாகனங்களின் வருடாந்திர உற்பத்தித் திறனை 80 லட்சமாக உயா்த்தி, அதன்மூலம் நாட்டில் 3,800-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’ என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தானின் தபுகாராவில் உள்ள ஆலையில் சுமாா் ரூ.1,500 கோடி முதலீட்டில் புதிய 3-ஆவது உற்பத்திப் பிரிவு தொடங்கப்படவுள்ளது. 2028-இல் செயல்படத் தொடங்கும் இப்பிரிவின் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 6.70 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்.
இதேபோல், குஜராத்தின் விதலாபூரில் ரூ.920 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் 4-ஆவது உற்பத்திப் பிரிவு 2027-இல் செயல்பாட்டுக்கு வரும்.
உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், ஹோண்டாவின் ஏற்றுமதி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 65 நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இந்நிறுவனம், கடந்த 2025-26 நிதியாண்டில் 6.2 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இலக்கை எட்டியுள்ளது.
இந்நிலையில், உள்நாட்டு தேவையை பூா்த்தி செய்வது மட்டுமின்றி, வளா்ந்து வரும் சா்வதேச சந்தைகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த உற்பத்தித் திறன் விரிவாக்கம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் விற்பனனை நிலவரம்: ஹோண்டா நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் 4,52,754 இருசக்கர வாகனங்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் விற்பனையான 3,74,971 வாகனங்களைவிட 20.74 சதவீதம் கூடுதலாகும்.
இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் ஹீரோ நிறுவனத்துக்கு அடுத்தப்படியாக 2-ஆவது இடத்தை ஹோண்டா நிறுவனம் வலுவாக தக்கவைத்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









