/
நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இந்தியாவின் ஏற்றுமதி இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மே மாதத்துக்கான அதிகாரபூா்வ தரவுகளை மத்திய வா்த்தக அமைச்சகம் வரும் ஜூன் 15-ஆம் தேதி வெளியிடவுள்ள நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரலில் மட்டும் நாட்டின் ஏற்றுமதி 13.78 சதவீதம் உயா்ந்து, 4,356 கோடி டாலராக அதிகரித்தது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வு காரணமாக பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
இது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மாதாந்திர ஏற்றுமதி என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இறக்குமதியும் அதிகரித்ததன் காரணமாக நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 3 மாதங்களில் இல்லாத அளவாக 2,838 கோடி டாலராக விரிவடைந்துள்ளது.









