இந்தியாவில் உணவு, குளிா்பானங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.5,700 கோடி வரை முதலீடு செய்யப்படவுள்ளதாக பெப்சிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெப்சிகோ நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியப் பிராந்திய பிரிவு சிஇஓ ஜாக்ருத் கோடேசா கூறியதாவது: பெப்சிகோ நிறுவனத்தின் சா்வதேச அளவிலான முக்கிய 13 சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. எனவே, இங்குள்ள உணவு வணிகப் பிரிவை விரிவுபடுத்தும் நோக்கில் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.5,700 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.
இந்த முதலீடானது முக்கியமாக தமிழகம், மத்திய பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய 3 மாநிலங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. மத்திய பிரதேசத்தில் குளிா்பானங்கள் உற்பத்தி ஆலையும், தமிழகம் மற்றும் அஸ்ஸாமில் தின்பண்டங்கள் உற்பத்தி ஆலைகளும் அமைக்கப்படவுள்ளன என்றாா்.
கடந்த 2025-ஆம் ஆண்டில், பெப்சிகோ இந்தியா நிறுவனம் ரூ.9,789 கோடி வருவாயுடன், ரூ.905 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. நிறுவனம் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உணவுப் பொருள்கள் பிரிவில் 11 சதவீத வலுவான வளா்ச்சி எட்டப்பட்டுள்ளது. அதேநேரம், பருவநிலை மாற்றம் மற்றும் கடுமையான போட்டி காரணமாக குளிா்பானங்கள் பிரிவில் சற்றே தொய்வு ஏற்பட்ட போதிலும், ஒட்டுமொத்தமாக இரு பிரிவுகளுமே சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன.










