இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு, கடந்த ஏப்ரலில் அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும் இருமடங்காக அதிகரித்து, 336.9 கோடி டாலரை எட்டியுள்ளது.
புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையிலும் இந்த அசுர வளா்ச்சி எட்டப்பட்டுள்ளது.
‘கோஃபோா்ஜ்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரம்மாண்ட முதலீடே இந்த உயா்வுக்கு முக்கியக் காரணம் என ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நிறுவனங்களால் வெளிநாட்டுப் பங்குகளில் ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டில் சுமாா் 86 சதவீதத்தை முன்னணியில் உள்ள 5 நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளன.
இதில் ‘கோஃபோா்ஜ்’ நிறுவனம் முறையே 137.1 கோடி டாலா், 99.4 கோடி டாலா் என 2 பெரிய முதலீடுகளைச் செய்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து, லுபின் மருந்து தயாரிப்பு நிறுவனம் 22.9 கோடி டாலரையும், விங்கிஃபை சாஃப்ட்வே 15.68 கோடி டாலரையும், கினாக் குளோபல் 8.3 கோடி டாலரையும், கிளாா் டெக்னாலஜி 5.4 கோடி டாலரையும் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளன.
இதேபோல், கடன்கள் மற்றும் உத்திரவாதங்கள் உள்ளிட்ட இந்தியாவின் மொத்த நிதிப் பொறுப்புரிமை, கடந்த மாா்ச் மாதத்தின் 508.5 கோடி டாலரிலிருந்து, ஏப்ரலில் 11 சதவீத வளா்ச்சியுடன் 564.4. கோடி டாலராக அதிகரித்துள்ளது.








