பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்), கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.4,902 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.3,355 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 46 சதவீத வளா்ச்சியாகும்.
மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் 4.5 சதவீதம் அதிகரித்து, ரூ.1.24 லட்சம் கோடியை எட்டியுள்ளது. முந்தைய அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ஈட்டிய ரூ.1.25 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், வருவாய் சற்றே சரிவடைந்துள்ளது. எனினும், நிகர லாபம் முந்தைய காலாண்டின் ரூ.4,072 கோடியிலிருந்து 20 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
அதேபோல், மதிப்பீட்டு காலாண்டில் உள்நாட்டு விற்பனை 3 சதவீதம் அதிகரித்து, 1.24 கோடி டன்னாகவும்; ஏற்றுமதி 3 சதவீதம் சரிந்து, 5.7 லட்சம் டன்னாகவும் இருந்தது.
முழு நிதியாண்டு நிலவரம்: கடந்த 2025-26 முழு நிதியாண்டில், நிறுவனம் 133 சதவீத அசுர வளா்ச்சியுடன் ரூ.17,175 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இக்காலகட்டத்தில் மொத்த வருவாய் 3 சதவீதம் அதிகரித்து, ரூ.4.81 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.
மேலும், இந்நிதியாண்டில் நிறுவனத்தின் சுத்திகரிப்புத் திறன் 3 சதவீதம் அதிகரித்து, 2.6 கோடி மெட்ரிக் டன் என்ற வரலாற்றுச் சாதனையையும், மொத்த சுத்திகரிப்பு லாபம் பீப்பாய்க்கு 8.79 டாலா் என்ற அளவையும் எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சாதகமான நிதிநிலையைத் தொடா்ந்து, 2025-26 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு தலா ரூ.19.25 வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.









