பலப் பரீட்சை களமாகும் கோவை!

செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிந்த களிப்பில் இருந்த திமுகவினர், கோவையில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்ற அதிமுகவின் அறிவிப்பை பத்தோடு பதினொன்றாகவே கருதினர். ஆனால்,அதிமுகவுக்கு கூடிய
பலப் பரீட்சை களமாகும் கோவை!
Updated on
2 min read

செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிந்த களிப்பில் இருந்த திமுகவினர், கோவையில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்ற அதிமுகவின் அறிவிப்பை பத்தோடு பதினொன்றாகவே கருதினர். ஆனால்,அதிமுகவுக்கு கூடிய கூட்டம் அவர்களை சற்று நிலை தடுமாற வைத்துவிட்டது.

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடத்தப்பட்ட அப் பொதுக் கூட்டம், கோவை நகரையே குலுக்கிவிட்டது எனலாம். கூட்டம் நடந்த வஉசி பூங்கா மைதானம் மட்டுமின்றி, அதையொட்டிய பிரதான சாலையான அவிநாசி சாலையே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.

2006 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கோவை மாவட்டத்தை தங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதற்காக திமுக தலைமை எத்தனையோ உத்திகளை எடுத்தபோதும் அது சாதகமாக அமையவில்லை. இதனாலேயே செம்மொழி மாநாட்டின் மூலமாக அடிப்படை வசதிகûளைச் செய்து கொடுத்து தங்கள் பக்கம் மக்களை ஈர்க்க வேண்டும் என்று கோவையில் மாநாட்டை நடத்தி முடித்ததாகவும் ஒரு கருத்து இருக்கிறது.

செம்மொழி மாநாட்டுக்கு வந்த கூட்டம் மாநாடு வெற்றியடைந்துவிட்டதை நிரூபித்துவிட்டது என்றும், கொங்கு மண்டல மக்கள் திமுக பக்கம் தான் என்றும் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு நடந்த பொதுக் கூட்டங்களில் திமுகவினர் கூறிவந்தனர்.

இந்நிலையில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் என்று அறிவித்த ஜெயலலிதா, பின்னர் அதை கண்டனப் பொதுக் கூட்டமாக மாற்றினார். அதிமுகவினரே எதிர்பார்த்தார்களா எனத் தெரியவில்லை, கட்டுக்கடங்காத கூட்டம் வந்து சேர்த்துவிட்டது. இது திமுகவுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.÷இதை திமுக அமைச்சர்கள் வெளிப்படையாகப் பேசியதைக் காண முடிந்தது. "இப்போது கோவை யார் பக்கம் என்று போட்டி போடக்கூடிய நிலைக்கு வந்துவிட்டது.

செம்மொழி மாநாட்டில் தலைமைச் செயலகமே கோவையில் இயங்கியதையும், கோவைக்கு கிடைத்துள்ள வசதிகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும்' என்று அமைச்சர்களே பேசத் தொடங்கிவிட்டனர்.

கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தி முடித்ததை தேர்தல் வெற்றி போல, அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். கோவை நகரின் பல்வேறு இடங்களிலும் பொதுக் கூட்டத்துக்கு மக்கள் திரண்ட புகைப்படத்துடன் நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திமுக சார்பில் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தை கோவையில் நடத்த திடீரென முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவானந்தா காலனியில் தான் பெரும்பாலும் திமுக பொதுக் கூட்டம் நடத்தப்படும். ஆனால், இந்த முறை அதிமுக பொதுக் கூட்டம் நடத்திய அதே வஉசி பூங்காவில் நடத்த வேண்டும் என்று திமுக தலைமை விருப்பம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆகஸ்ட் 2-ல் துணை முதல்வர் ஸ்டாலின், டைடல் பூங்காவை திறப்பது என்று முடிவாகியிருந்தது. இந்நிலையில் திடீரென அன்றைய தினம் பொதுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்பதுதான் ஹைலைட். அதிமுக நடத்தியதைக் காட்டிலும் பிரமாண்டத்தைக் காட்ட வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டிருக்கிறதாம்.

பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் விட்டதைப் பிடிக்க வேண்டும் என்பதில் திமுகவும், அவர்களது முயற்சியை முறியடிக்க வேண்டும் என அதிமுகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இதுஒருபுறம் இருக்க தேமுதிக தலைவர் விஜயகாந்தும் கோவைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.  பெட்ரோலியப் பொருள்கள் மீதான விற்பனை வரியைக் குறைக்க வலியுறுத்தி கோவையில் ஆகஸ்ட் 5 -ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

எது எப்படியோ அரசியல் கட்சிகளின் பலப் பரீட்சை களமாக கோவை மாறிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com