இங்கிருந்து, உயிர் என்றால் என்ன என்கிற கேள்விக்கு வரலாம். இதற்குப் பதில் தர, ஓர் உயிரினத்தை உடைத்து உடைத்துப் பார்க்கும் ஒரு பார்வை முன்வைக்கப்பட்டது. உடல் உறுப்புகள், திசுக்கள், செல்கள், மூலக்கூறுகள்... கட்டமைக்கப்பட்ட எந்த ஓர் இயந்திரத்தையும் உடைத்துப் பார்ப்பதுபோல பார்க்கும் ஒரு பார்வை, ஆழ அழுத்தமாக அறிவியலில் பதிந்திருக்கிறது. இது மேற்கத்திய பண்பாட்டில், ஆபிரகாமிய இறையியலின் பங்களிப்பு. கலீலியோ தொடங்கி டார்வின் என தொடர்ந்த, இறையுதிர் காலத்தில் இறை இல்லாத இயந்திரப் பார்வையாக இது மேலெடுக்கப்பட்டது. டெஸ்கார்த்தே, அனைத்தையும் பகுத்துப் பார்க்கும் ஒரு அறிதல் முறையை உருவாக்கியிருந்தார். நியூட்டானிய இயற்பியலையும், கார்ட்டீசிய பகுப்பு முறையையும் உட்கொண்டு உருவாகிய ஒரு அறிதல் முறை. அதை நாம் இன்று குறுக்கலியல் – reductionism - எனக் கூறுவோம். இதை இன்னும் நீட்டிக்கலாம். மனிதனின் தன்னுணர்வும், தன் அடையாளமும்கூட இப்படிக் குறுக்கப்பட முடியும். சூழலியலும், க்வாண்டம் இயற்பியலும் மேலோங்கியபோது, குறுக்கலியல் மட்டுமல்லாது, ஒரு முழுமைத்துவ பார்வையையும் (holism) அறிவியல் தனதாக்கிக்கொண்டது. ஆனால் அதுவரை, அறிவியல் கட்டமைக்கப்பட்ட இயற்கை இயந்திரத்தை அறிந்தது. வில்லியம் பிளேக் தீட்டிய இறைவனின் படைப்புச் சித்திரத்தையும், நியூட்டனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்று தெரியும். இறைவனின் வடிவமைப்பை நியூட்டன் அறிய முயற்சிக்கிறார்.