நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

9. எவ்வளவு கொழுப்பு? - 3

மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்குப் பதிலாக, நோயாளிகளில் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்ட ஆரம்பித்தது! அதுமட்டுமல்ல. ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டது. இன்னும் ஒருபடி மேலே போய், பெண்களைப்போல ஆண்களுக்கு மார்பகங்கள் வளர ஆரம்பித்தன! ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள் என்ற தத்துவத்தை அம்மாத்திரைகள் நிரூபித்தன!

News image
Updated On :8 மே 2016, 8:37 am

நாகூர் ரூமி

நீங்கள் முட்டாளாக்கப்பட்டுவிட்டீர்கள் என்று புரியவைப்பதைவிட, மக்களை முட்டாளாக்குவது எளிமையானது. – மார்க் ட்வைன்

பொய் 3 – அதிக கொலஸ்ட்ரால் இதயத்தின் தமனிகளை அடைக்கிறது.

ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகும்போது, அது இதயக் குழாய்களில் போய்த் தங்கிக்கொண்டு அடைத்துக்கொள்கிறது. அதனால், இதயத்தின் வேலை சீர்கெட்டு மாரடைப்பு வரும் வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்களால் சந்தேகத்துக்கு இடமின்றி, விவாதங்களுக்கு அப்பாற்பட்டு நம்பப்படுகிறது.

ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் கொலஸ்ட்ரால் மாலிக்யூல்கள், இதயக் குழாய்களின் அறைகளில் போய் தங்கிக்கொண்டு, ரத்தம் சீராகச் செல்வதைத் தடுக்கும் என்பது உண்மையானால், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்களுக்குத்தானே இப்பிரச்னை ஏற்பட வேண்டும்? அதுதானே நியாயம்? ஆனால் அப்படித்தான் நடக்கிறதா?

1936-ல், நியூயார்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லாண்டே, ஸ்பெர்ரி (Lande and Sperry) என்ற இரண்டு நோய்க்குறியியல் பேராசிரியர்கள், இதுபற்றி ஆராய்ச்சி செய்தனர். ஆராய்ச்சியின் முடிவில், ரத்தத்தில் இருக்கும் அதிகக் கொலஸ்ட்ரால் அளவுக்கும், இதயக் குழாய் அடைப்புக்கும் தொடர்பில்லை என்று தெரியவந்தது!

அதன்பிறகு, கனடாவைச் சேர்ந்த டாக்டர் ஜெ.ஸி. பேட்டர்சன் (Dr J.C. Paterson), போர்களில் நீண்டகாலம் பங்கேற்று மருத்துவமனைகளில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த 800 பேரைத் தன் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தினார். அவ்வப்போது அவர்களது ரத்த மாதிரிகளை ஆராய்ந்தார். அவர்களில் இறந்தவர்களுக்குப் பிரேதப் பரிசோதனையும் செய்யப்பட்டது. அவர்களது ரத்தத்தில் இருந்த கொலஸ்ட்ராலின் அளவுக்கும், இதயக் குழாய் அடைப்புக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை.

இதேபோன்ற பரிசோதனையை, ஆக்ராவில் இருந்த டாக்டர் மதுர் என்பவரும் அவரது சகாக்களும் செய்தனர். இருபது நோயாளிகளின் ரத்தத்தை அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்னும், இறந்து 16 மணி நேரம் கழித்தும் எடுத்துப் பரிசோதித்தனர். பின்னர், திடீர் விபத்தில் இறந்துபோன இருநூறு பேர்களின் ரத்தத்திலும் அப்பரிசோதனையைச் செய்தனர். ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவுக்கும், இதயக் குழாய் அடைப்புக்கும் தொடர்பில்லை என்று டாக்டர் பேட்டர்சன் வந்த முடிவுக்கே அவர்களும் வந்தனர். போலந்து, கௌதமாலா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளிலும் இது உறுதியானது.

பொய் 4 – கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தால் வாழ்நாள் அதிகமாகும்.

மிருகக் கொழுப்பு உள்ள உணவை வருஷக்கணக்கில் போட்டு மாட்டியிருந்தாலும், உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பதையும், கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருந்தாலும் மாரடைப்பு வரும் என்பதையும் விஞ்ஞானபூர்வமான பல பரிசோதனைகள் நிரூபித்தன. உண்மை இப்படி இருக்க, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலமோ அல்லது கொழுப்புச் சத்துக் குறைவான உணவை உட்கொள்வதன் மூலமோ மாரடைப்பு வராமல் தடுக்க முடியுமா? வாழ்நாளை அதிகரிக்க முடியுமா? முடியாது என்பதுதான் விஞ்ஞானம் நிரூபித்துச் சொன்ன பதில்!

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் வரக்கூடிய ஆபத்துகளைவிட, அளவைக் குறைத்தால் அதிக ஆபத்துகள் ஏற்படும் என்கிறார் டாக்டர் ரவன்ஸ்கோவ்! ஆனால், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தால் என்னாகும் என்று மிகத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், புகைப் பிடித்தலை நிறுத்துதல், அதிக எடையைக் குறைத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல், வேலையை மாற்றிக்கொள்ளுதல் அல்லது வேலையை விட்டுவிடுதல், காதலித்தல், விவாகரத்து செய்தல் (திருமணத்துக்குப் பிறகுதான்), ரொம்ப சூடா இருக்குன்னு ஏழைகளின் ஊட்டிகளை நோக்கி இடம்பெயர்தல் போன்ற எந்தக் காரியமும் செய்யாமல், பழைய வாழ்க்கை முறையையே கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்ததால் குறிப்பிட்ட விளைவு ஏற்பட்டதா அல்லது கொடைக்கானல் குளிரை காதலியை வைத்துச் சமாளிக்க முயன்று முடியாமல் கோபித்துக்கொண்டதால் அப்படியொரு விளைவு ஏற்பட்டதா என்று துல்லியமாகச் சொல்ல முடியும் என்றும் அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்!

Story image

குறிப்பிட்ட வகை ‘டயட்’ நம்மைக் காப்பாற்றுமா?

லண்டனில் இது பற்றிய ஒரு ஆராய்ச்சி நடந்தது. லண்டனில் நான்கு மருத்துவமனைகளில், மாரடைப்பு வந்து சேர்க்கப்பட்டிருந்த 400 பேருக்கு மிருகக் கொழுப்புக்குப் பதிலாக சோயா மொச்சை எண்ணெய் கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. சோயா எண்ணெய் கொடுக்கப்பட்டவர்களுக்கும், கொடுக்கப்படாதவர்களுக்கும் இதய வால்வுகளில் அடைப்பு ஏற்படத்தான் செய்தது! இன்னும் சொல்லப்போனால், சோயா எண்ணெய் சாப்பிட்டவர்களின் இதயங்களின் பெருந்தமனிகளில் மற்றவர்களைவிட அதிகமாகக் கொலஸ்ட்ரால் இருந்தது!

இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் மூலமாக இறப்பு ஏற்படுவது குறைந்துபோனது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அடைப்பு ஏன் ஏற்படுகிறது, அது ஏன் குறையவில்லை என்று மேற்கண்ட பரிசோதனைகள் மூலம் தெரியவில்லை. எனவே, கொழுப்புச் சத்துள்ள உணவுகளைக் குறைத்துக்கொள்வதுதான் இம்மாதிரியான அடைப்புகளில் இருந்து மீள வழி என்று சொல்ல முடியவில்லை. இன்னின்ன மாதிரியான ’டயட்’ எடுத்துக்கொண்டால் பிரச்னை வராமல் வாழலாம் என்று சொல்ல முடியவில்லை. ‘டயட்’டுக்கும் உடலில் ஏற்படும் பிரச்னைக்கும் நேரடியான தொடர்பு ஏதுமில்லை என்பதைத்தான் பல ஆண்டுகளாகச் செய்யப்பட்ட பரிசோதனைகள் காட்டின.

அதோடு, பரிசோதனைகளெல்லாம் பெரும்பாலும் முதியவர்களிடம்தான் செய்யப்பட்டன. அவர்களில் பலர் புகைப் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமைகளாக இருந்தனர். அவர்களின் இதய நோய்கள், அவர்களின் கெட்டப் பழக்கங்களினாலேயே ஏற்பட்டிருந்தன. உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டதால், பெரிய நன்மையோ தீமையோ ஏற்படவில்லை.

விதவிதமான பரிசோதனைகளும் விநோத விளைவுகளும்

1967-ல், அமெரிக்காவில் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. அதுவும் ஏழாண்டுகளுக்கு. ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க அமெரிக்க அரசின் ஆதரவோடு தேசிய இதய, நுரையீரல் மற்றும் ரத்த இன்ஸ்டிடியூட் நடத்திய மெகா பரிசோதனை அது. சிகாகோ பேரா. ஜெரமியா ஸ்டாம்லர் (Prof Jeremiah Stamler) தலைமையில் அது நடத்தப்பட்டது. ‘த க்ரோனரி ட்ரக் ப்ராஜெக்ட்’ (The Coronary Drug Project) என்று அதற்குப் பெயர்.

Story image

53 மருத்துவமனைகளில் இருந்து நாற்பது முதல் ஐம்பது வயதுக்குட்பட்ட 8000 பேர் பரிசோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு நிகோடினிக் ஆஸிட்கள், க்ளோஃபைப்ரேட்டுகள், தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் செக்ஸ் ஹார்மோன்கள் போன்ற மருந்துகள் கொடுக்கப்பட்டன. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய்கள் வராமல் அவை அவர்களைக் காப்பாற்றும் என்று நம்பப்பட்டது. ஆனால், 18 மாதங்கள் அம்மாத்திரைகளை எடுத்துக்கொண்டதற்குப் பின் நடந்தது என்ன?

மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்குப் பதிலாக, நோயாளிகளில் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்ட ஆரம்பித்தது! அதுமட்டுமல்ல. ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டது. இன்னும் ஒருபடி மேலே போய், பெண்களைப்போல ஆண்களுக்கு மார்பகங்கள் வளர ஆரம்பித்தன! ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள் என்ற தத்துவத்தை அம்மாத்திரைகள் நிரூபித்தன! அதோடு விட்டதா என்றால் இல்லை. கேன்ஸரும் அவர்களுக்கு வர ஆரம்பித்தது! க்ளோஃபைப்ரேட் கொடுக்கப்பட்ட பலர் செத்தே போனார்கள்!

திங்கள்கிழமை வந்த தலைவலிக்கு எடுத்துக்கொண்ட மாத்திரை வெள்ளிக்கிழமை வரப்போகும் தலைவலியைக் குணப்படுத்தும் என்று சொல்வது மாதிரி அப்பரிசோதனைகள் இருந்தன என்கிறார் டாக்டர் ரவன்ஸ்கோவ்!

பொய் 5 – ஸ்டாடின்கள் மனிதகுலத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம்

ரத்ததில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் பொதுப்பெயர் ஸ்டாடின் (Statin). இந்தப் பெயரை ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளேன். நம் உடல் தயாரிக்கும் முக்கியமான பொருள்களின் அளவைக் குறைப்பது இதன் வேலை. நமது உடல் நமக்காகத் தயாரிக்கும் முக்கியப் பொருள்களில் ஒன்றுதான் கொலஸ்ட்ரால் என்று ஏற்கெனவே பார்த்தோம். அதன் அளவைக் குறைக்க ஸ்டாடின்கள் பயன்படுத்தப்பட்டன.

Story image

1980-களில்தான், ஸ்டாடின்கள் மருந்துக் கம்பெனிகளால் அறிமுகப்படுத்தப்பட்டன. ஸ்டாடின்களுக்கு முந்தைய மருந்துகள், கொலஸ்ட்ரால் அளவை 15 முதல் 20 விழுக்காடுவரைதான் குறைத்தன. ஆனால் ஸ்டாடின்கள், 30 முதல் 40 விழுக்காடுவரை குறைத்தன என்று சொல்லப்பட்டது. ஆரோக்கியமான மனிதர்களுக்கும், இதய நோய் இருந்தவர்களுக்கும் செய்யப்பட்ட பல பரிசோதனைகளுக்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வந்தார்கள்.

ஒரு முறை மாரடைப்பு வந்தவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்டாடின் மாத்திரை எடுத்துக்கொண்டால், 93 அல்லது 94 விழுக்காட்டினர் நான்கு முதல் ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் மாரடைப்பு வந்து இறக்காமல் இருக்கும் சாத்தியம் உண்டு. மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், 92 விழுக்காட்டினருக்கு அந்தச் சாத்தியம் உண்டு! மாத்திரை எடுத்துக்கொண்டால் ஒரு வாரத்தில் குணமாகும், எடுக்காவிட்டால் ஏழு நாட்களில் குணமாகும் என்ற திரைப்பட வசனத்தை நினைவுபடுத்துகின்றன ஸ்டாடின் பரிசோதனைகள்!

இதுமட்டுமல்ல. ஆரோக்கியமானவர்களுக்கு ஸ்டாடின் கொடுத்தால், அது எந்தப் பிரச்னையை தீர்ப்பதற்காகக் கொடுக்கப்படுகிறதோ அதே பிரச்னையை ஏற்படுத்தலாம் என்பதும் கண்டறிந்த முடிவுகளில் ஒன்று! நமது தசைகளும் கல்லீரலும் ஸ்டாடின்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. நினைவாற்றல் இழப்பும் ஸ்டான்களால் ஏற்படும் முக்கியப் பக்கவிளைவுகளில் ஒன்றாகும்.

டாக்டர் டுவான் க்ராவ்லினுக்கு நடந்தது என்ன?

டாக்டர் டுவான் எட்கார் க்ராவ்லின் (Duane Graveline), ஒரு நாசா (NASA) விண்வெளி வீரரும், விண்வெளி மருத்துவ ஆராய்ச்சியாளருமாவார். ‘Lipitor, Thief of Memory’ என்ற தனது நூலில் தனக்கு நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். அவருக்கு அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருந்ததால், லிபிட்டர் என்னும் ஸ்டாடின் கொடுக்கப்பட்டது. அந்த மாத்திரை எடுத்துக்கொண்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் அவர் தன் வீட்டுப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்தார். ‘ஏங்க, இப்படி சுத்திகிட்டிருக்கீங்க? உங்களுக்கு என்னாச்சு? நம்ம காருக்குள்ள வாங்க’ என்று அவர் மனைவி அழைத்தார். ஆனால், மனைவியை அவருக்கு அடையாளம் தெரியவில்லை! ஆஹா, தமிழ்நாட்டுக் கணவன்மார்களுக்கு மிகவும் அவசியமான மாத்திரை என்று தோன்றுகிறாதா?! ரொம்ப கஷ்டப்பட்டு, வற்புறுத்தித்தான் அவரை காருக்குள் அழைத்துச்செல்ல முடிந்தது! அதோடு கதை முடிந்ததா என்றால் இல்லை.

Story image

அவரைப் பரிசோதித்த நரம்பியல் நிபுணருக்கு, அவரது நினைவாற்றல் இழப்புக்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. எல்லாம் ‘நார்மலா’கத்தான் இருந்தது, மறதியைத் தவிர. அடுத்தமுறை, வழக்கமான ‘செக்அப்’பின்போது மீண்டும் நாசா டாக்டர்கள் அவருக்கு லிபிட்டர் கொடுத்தார்கள். அடுத்த ஆறு வாரங்கள் கழித்து மீண்டும் நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது டாக்டர் க்ராவ்லினுக்கு. இந்த முறை, 12 மணி நேரங்களுக்கு மறதி நீடித்திருந்தது.

இந்த முறை, உயர்நிலைப் பள்ளி வாழ்க்கைக்குப் பிறகான எதுவுமே அவருக்கு நினைவில் வரவில்லை! அவருடைய கல்லூரி வாழ்க்கை, திருமணம், நான்கு குழந்தைகள், நாசாவில் டாக்டரானது, ரிடையர் ஆனது, எட்டு புத்தகங்கள் எழுதியது - எதுவுமே நினைவில் இல்லை! எங்கே செல்லும் இந்தப் பாதை என்று நம்ம ‘சேது’ மாதிரி ஆகிப்போனார்!

கடைசியில், லிபிட்டர் ஸ்டாடின்தான் தன்னுடைய வில்லன் என்று அவரே கண்டுபிடித்தார். அதன்பிறகுதான், அந்த ஸ்டாடினின் சாத்தானிய வேலைகள் பற்றி மேலே சொன்ன புத்தகத்தை எழுதினார்!

Story image

அவர் அப்படி எழுதிய பிறகு தங்களுக்கும் அப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்ததாக ஸ்டாடின் எடுத்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.

ஸ்டாடினும் பாலிநியூரோபதியும்

மூளையின் வெளிப்பக்க நரம்புகள் பாதிக்கப்படுவதற்குப் பெயர் பாலிநியூரோபதி. ஒருவருக்கு அது வந்துவிட்டால், பாதங்களில் தொடங்கி உடல் முழுக்க பல பாகங்களும் கடுமையாக வலிக்க ஆரம்பிக்கும். எரியும். தொடுஉணர்ச்சி முழுமையாக அற்றுப்போகலாம். தசைகளுக்குப் பலவீனம் ஏற்படும். நடக்க முடியாமல் போகலாம்.

டென்மார்க்கில் டாக்டர் டேவிட் என்பவர் தலைமையில் நடந்த பரிசோதனையில், ஆயிரக்கணக்கானோர் பரிசோதிக்கப்பட்டனர். ஸ்டாட்டின் எடுத்துக் கொண்டவர்களுக்கு, எடுத்துக் கொள்ளாதவர்களைவிட 16 மடங்கு அதிகமாக பாலிநியூரோபதி பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது!

கேன்ஸரை உருவாக்கும் ஸ்டாட்டின்

எல்லாவற்றுக்கும் மேலாக, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்காக உபயோகிக்கப்படும் ஸ்டாட்டின்கள் கேன்ஸரை உருவாக்குகின்றன என்று கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிக் குழு கூறியது!

ஓர் எச்சரிக்கை

ஒரு மருந்தை ஆயிரக்கணக்கான மனிதர்களுக்குக் கொடுத்துப் பரிசோதிக்க வேண்டுமென்றால், அதற்குப் பல கோடிகள் செலவாகும். அத்தகைய செலவுகளை ஏற்றுக்கொள்ள மருந்துக் கம்பெனிகள் தயாராக இருந்தன / இருக்கின்றன. ஏன்? செலவு செய்ததைவிடப் பல மடங்கு அதிகமாக அம்மருந்துகளை விற்பதன் மூலம் லாபம் சம்பாதிக்க முடியும் என்று அவற்றுக்குத் தெரியும். அதனால், மேய்ப்பனுடைய வேலையைச் செய்யும் ஓநாய்களை எப்படி நம்பமுடியும் என்று கேட்கிறார் டாக்டர் உஃபே ரவன்ஸ்கோவ்!

கொழுப்பு - சில உண்மைகள்

கொழுப்பு என்று அறியப்படும் கொலஸ்ட்ரால், உடலுக்கு மிகவும் அவசியமானது. நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான உயிரணுக்களை இழுத்துப் பிடித்து வைத்துக்கொண்டிருப்பது இந்த கொலஸ்ட்ரால்தான்.

நாம் சாப்பிடுவதால் உண்டாகும் கொழுப்பைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு கொலஸ்ட்ராலை நம் உடலே உருவாக்கிக்கொள்கிறது. 90 விழுக்காடு கொலஸ்ட்ராலை லிவரே (கல்லீரல்) உருவாக்கிக்கொள்கிறது. பத்து விழுக்காடு கொலஸ்ட்ராலைத்தான் உணவு கொடுக்கிறது.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவை நாம் சாப்பிடும்போது குறைவாகவும், கொழுப்புச்சத்து குறைவான உணவை நாம் சாப்பிடும்போது அதிகமாகவும் கொலஸ்ட்ராலை உடல் உற்பத்தி செய்துகொள்கிறது!

உடலில் உண்டாகியிருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்காக நாம் சாப்பிடும் மாத்திரை மருந்துகளால் நம் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைகிறது. நம் வாழ்நாளும் குறைந்துபோகிறது. முக்கியமாக நமது கல்லீரல் பாதிக்கப்படுகிறது.

ஸ்டாடின்கள் (Statins) எனப்படும் அவ்வகை மருந்துகள் கேன்சரை ஏற்படுத்தவல்லவை.

உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு ரொம்பவும் குறைந்துபோய்விட்டால், உங்களுக்கு வன்முறை உணர்வும், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கொழுப்புச்சத்து அதிகமாக உள்ள வயதானவர்கள், குறைவாக உள்ள வயதானவர்களைவிட அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள்.

உங்கள் உணவில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவுக்கும், உங்கள் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவுக்கும் தொடர்பில்லை. முன்னது, பின்னதை பாதிப்பதில்லை.

ரத்தத்தில் அதிகக் கொலஸ்ட்ரால் இருக்குமானால், அதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. அது இதயத்தின் தமனிகளையும் நாளங்களையும் அடைத்துவிடும் என்பது விஞ்ஞானத்தின் தவறான கருத்தாகும். நமக்கு வயதாகும்போது, நமது இதயத்தின் நாளங்கள், தமனிகள், அதைச் சுற்றியுள்ள தசைகள் / நார்களெல்லாம் நெகிழ்வுத்தன்மை குறைந்து விறைப்பாகிவிடும். அந்த நிலையில், இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தம் கொண்டுசெல்லும் ரத்தக் குழாய்களின் உள்சுவர்களில் கொழுப்பு, கால்சியம் போன்றவை தங்குவதற்கு வசதியாகிவிடும்.

‘நீங்கள் சாப்பிடும் பொருளால் உங்களுக்குப் பிரச்னை வருவதில்லை. உங்களை எது சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதோ அதனால்தான் பிரச்னை வருகிறது’ என்று அழகாகச் சொன்னார் டாக்டர் பி.எம். ஹெக்டே. நம்மை எது சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது?

அச்சம்.

பி.பி., கொலஸ்ட்ரால், சுகர் போன்றவை பற்றிய கற்பனையும் அச்சமும்தான் நமது பிரச்னை. மருத்துவமனைகளும் டாக்டர்களும் அதிகரித்துக்கொண்டே இருப்பதற்குக் காரணம், உச்ச வியாபாரமாக இருக்கும் அச்ச வியாபாரம்தான். படித்தவர்களும் படிக்காதவர்களும் லட்சம் லட்சமாகக் கொடுத்து அச்சத்தை வாங்கி மனத்தில் போட்டுக்கொள்வதுதான் பிரச்னை.

கொலஸ்ட்ராலைப் பற்றி ஓரளவு பார்த்துவிட்டோம். மீண்டும் சந்திக்கலாம். அடுத்த முக்கிய அச்சப்பொருளைப் பற்றிய தகவல்களுடன்…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.