சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மழைக்கால நோய்களை விரட்டியடிப்போம்

பருவ காலத்துக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளும்

News image
Updated On :25 நவம்பர் 2012, 10:36 pm

பருவ காலத்துக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளும் இயல்புடையது நம் உடம்பு. இருப்பினும், ஒவ்வொரு முறையும் மழை அழியாத தடங்களை விட்டுச் செல்கிறது. 

மழையில் நனைந்தபடி நடந்து வருவது உற்சாகமூட்டும் அனுபவம்தான் என்றாலும் அது தன்னுடன் ஒரு வினையையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. மழைக்காலத்தில் வரக்கூடியது மலேரியா. இது அனாபெல்ஸ் என்னும் ஒரு வகை பெண் கொசுவால் ஏற்படுகிறது.  மலேரியா காய்ச்சல் விட்டு விட்டு வரும். உடம்பில் நடுக்கமும் பலவீனமும் ஏற்படும். நாள்பட்ட தண்ணீரில் கொசுக்கள் பல்கிப்பெருகுவதால் வீட்டின் அருகே தண்ணீரைச் சேர விடக் கூடாது.

அடுத்தது காலரா. இது அசுத்தமான, கெட்டுப்போன பழைய உணவுகளை உண்பதாலும், அசுத்தமான நீரைப் பருகுவதாலும் ஏற்படுகிறது. சுகாதாரமற்ற, ஆரோக்கியமற்ற இடங்களில் இந்நோய் வேகமாகப் பரவும்.

அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, வாந்தி, தசைகளில் திடீரென்று இழுப்பு ஏற்படுதல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள். சுற்றுப்புறத்தையும், நம் உடம்பையும் தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலமும், சுத்தமான காய்ச்சிய தண்ணீரைப் பருகுவதன் மூலமும்  இந்நோயைத் தடுக்கலாம்.  வாயை அடிக்கடி  சுத்தமான உப்புத் தண்ணீரினால் கொப்பளித்தல் நலம். காலரா நோயை  எளிதில் போக்கலாம் என்றாலும் அது வந்தவுடன் கவனத்துடன் இருப்பது நல்லது.

டைபாய்ட், இது ஒரு தொற்று நோய். இதுவும் உணவு மற்றும் தண்ணீரின் அசுத்தத்தினால் ஏற்படுகிறது; அசுத்த பித்தநீர் நம் உடம்பில்  தங்கி பின்னர் அது உயிருக்கே ஆபத்தாக முடியும். வயிற்று வலி, தலை வலி, இடைவிடாத ஜுரம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.

இது தொற்று நோய் என்பதால் இந்நோயால் பாதிக்கப்பட்டவரை தனியே இருக்க அனுமதித்து, முன்னெச்சரிக்கையாக மருத்துவரின் ஆலோசனையுடன் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது நல்லது.

காமாலை:  தலைவலியுடன் கூடிய ஜுரம், மூட்டுவலி, அடிக்கடி வாந்தி எடுத்தல் ஆகியன இந்நோயின் அறிகுறிகள். இந்நோய் வந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் தடுப்பு ஊசி போட்டு பூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். ஈ மொய்த்த பண்டங்களை உண்ணவே கூடாது. இந்நோயால் பாதிப்பட்டவர்கள் கொழுப்பு, எண்ணெய் இல்லாத சத்தான  உணவுகளை உண்ண வேண்டும்.

டெங்கு, இது விஷக் கிருமிகளைத் தாங்கி வரும் கொசுக்கள் கடிப்பதால் வருகிறது. இடைவிடாத ஜுரம்,  தாங்க முடியாத தலைவலி. உடல்வலி, மூட்டு வலி, தசை வலி, பசியின்மை, ஜீரணமாகாமல் இருத்தல், தோல் சிவந்து சொறி உண்டாவது, பல் ஈரிலிருந்து ரத்தம் வடிதல், உள்ளங்கை, கால்கள் சிவந்து போதல்  ஆகியவை இந்நோயின் அறிகுறியாகும். 

ஃபுளூ காய்ச்சல். அதிகமான சளி, தும்மல், இருமல் ஆகியவை புளு காய்ச்சலின் அறிகுறியாகும்.  ஓரிரு நாட்கள் ஓய்வு எடுத்தால் போதும் இந்நோய் குணமாகும். 

இதைத் தவிர மழைக் காலத்தில் சளி பிடித்தல், மூச்சுத் திணறல், அஜீரணம், ஒவ்வாமை ஆகியவை பொதுவாக ஏற்படும் நோய்களாகும். மழைக்காலத்தில் பூச்சி, புழுக்கள் வெளியே தலைகாட்டும் என்பதால் குழந்தைகளை  எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும்.

மூச்சுத் திணறல், காச நோய், இதய நோய் உள்ளவர்கள் மழைக் காலத்தில் நனையக் கூடாது. அசுத்தமான பழைய உணவுகளை உண்ணாமல் இருத்தல், மழைக்காலத்தில் உடம்பை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளையே அணிதல், கொசு வலைகள், கொசு விரட்டிகளைப் பயன்படுத்துதல் ஆகியவை கொசு மூலம் பரவும் மழைக் கால நோய்களைத் தடுக்கும்.

தண்ணீரின் மூலம் நோய்கள் பரவும் என்பதால் காய்ச்சிய தண்ணீரையே அருந்த வேண்டும். மழையில் நனைந்தால் உடனடியாக உடைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.    வைட்டமின் சி உள்ள காய்களையும், பழங்களையும் உண்ண வேண்டும்.  சிட்ரஸ் அமிலம் கொண்ட ஆரஞ்ச், எலுமிச்சை. பப்பாளி, கொய்யா போன்ற  நோய் எதிர்ப்பு சக்திக் கொண்ட பழங்களை உண்டால் உடம்பில் சளி சேராது. தக்காளி, காலி பிளவர், கோஸ் மற்றும்  பசலைக் கீரை மழைக் காலங்களில்  உண்ணத்  தகுந்தவைகளாகும்.

சாப்பிடுவதற்கு முன்பும், பின்னரும்  கைகளை நன்றாகக் கழுவவும். ஏனெனில் பல பாக்ட்டீரியாக்கள் நம் விரல் இடுக்குகளில், நகங்களில் ஒட்டிக் கொண்டு நோய் வர ஒத்தாசை புரியும்.   

பகல் நேரங்களில் தூங்குவது,  தேக சிரமத்துடன் உடற்பயிற்சி செய்வது, ஈரத் தலையுடனும், ஈர ஆடைகளுடனும் குளிரூட்டப்பட்ட அறையில் நுழைவது ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். துவட்டாத ஈரத் தலையுடன் இருந்தால் சைனஸ் தொல்லை ஏற்படும்.

மழைக் காலத்தில் வெளியில் சென்று வந்த பிறகு நம் பாதங்களை மெல்லிய அழுக்கற்ற  துணியால் துடைக்க வேண்டும். காய்கறிகளை நன்றாகக் கழுவிய பிறகே சமைக்க வேண்டும். பழங்களை நன்றாகக் கழுவிய பிறகே உ.ண்பது நல்லது. வெளியில் வைக்கப்பட்ட தோல் நீக்கிய பழங்களையும், துண்டாக்கப்பட்ட பழங்களையும் காய்கறிகளையும் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

சுகாதாரமற்ற நீரைக் குடிப்பதால் மஞ்சள் காமாலை, "இன்புளூயன்சா', வைரஸ் தாக்குதலால் "மெட்ராஸ்-ஐ' போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தோல் நோய்கள்  சேற்றுப் புண், சொறி, சிரங்கு ஏற்படாமல் இருக்க வெளியில் செல்லும்போது கண்டிப்பாக காலணி  அணிய வேண்டும். சேற்றுப் புண் மீது மஞ்சளும், கடுக்காயும் அரைத்துப்பூசினால்  உடனடியாக ஆறும். 

தேங்கி இருக்கும் நீரில் கால் வைக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில் சூறாவளிக் காற்றின் காரணமாக மின்சார ஒயர்கள் ஆங்காங்கே விழுந்திருக்க வாய்ப்பு உண்டு. அதனால் மின்சாரம் பாயும்.

ஆஸ்துமா, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மழை நீரால் ஓதம் வரும் வீடுகளில் வசிக்காமல் இருப்பது நல்லது. மழைக்காலங்களில் டீ, காபி அருந்துவதற்குப் பதிலாக காய்கறி சூப் குடிப்பது நல்லது. 

சுற்றுப்புறங்களில் குப்பைக் கூளங்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போடுவதால், அவை மக்கி பல்வேறு ஈக்கள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியை அதிகரித்து விடும்.  வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

குழிகள், சாக்கடைகள், பள்ளங்கள், நீர் நிறைந்த இடங்களை மணலிட்டு மூட வேண்டும்.

இவ்வாறான இடங்களில் பூச்சிக்கொல்லி மருத்துகளைத் தெளித்தும், காய வைத்த வேப்ப இலைகளைக் கொளுத்தியும் கொசுக்களை விரட்டலாம். ஆறு, குளம், கிணறு ஆகியவைகளில் அசுத்தம் பரவ வாய்ப்புள்ளதால், அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீரை வடிகட்டி, காய்ச்சிய பிறகே குடிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.