பாடலின்பம்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம் பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்!
பொருளின்பம்
எம்பெருமானே,
நான் புல்லாக, பூண்டாக, புழுவாக, மரமாக, பலவகை விலங்குகளாக, பறவையாக, பாம்பாக, கல்லாக, மனிதனாக, பேயாக, பூதகணமாக, கொடிய அசுரனாக, முனிவராக, தேவராக... இப்படி இப்படி எல்லாவிதமான பிறப்புகளையும் எடுத்து நான் மிகவும் இளைத்துவிட்டேன்,
மெய்யான உன்னுடைய பொன்னடிகளைக் கண்டு, இன்று நான் வீடுபேறு அடைந்தேன்! (இனி இப்படிப்பட்ட பல பிறவிகள் எனக்கு இல்லை!)
சொல்லின்பம்
பூடு: பூண்டு
விருகம்: மிருகம்
வல்: வலிய, கொடுமையான
இளைத்தேன்: மெலிந்தேன்/ வருந்தினேன்
வீடு: மோட்சம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.