பகுதி 17 – அன்னைப் பத்து - 2
என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் என்றைக்கும் மணமகனாக இருப்பவர்,


இறைவனையே தன் காதலன் என்று ஒரு பெண் கருதுகிறாள். அதை எண்ணி அவளுடைய அன்னை உரைப்பவை ‘அன்னைப் பத்து’ என்ற பாடல்களாக அமைந்துள்ளன. இதற்கு வேறொரு விளக்கமும் உண்டு. அந்தப் பெண் தன் அன்னையிடம் இறைவனைப் பற்றிச் சொல்கிறாள். அதைக் கேட்ட தோழி, அதனைப் பிறரிடம் சொல்கிறாள்.
இப்பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
நித்தமணாளர், நிரம்ப அழகியர்,
சித்தத்து இருப்பரால் அன்னே என்னும்,
சித்தத்து இருப்பவர் தென்னன், பெருந்துறை
அத்தர், ஆனந்தரால் அன்னே என்னும்.
*
ஆடு அரப்பூண், உடைத்தோல், பொடி பூசிற்றுஓர்
வேடம் இருந்தவாறு அன்னே என்னும்,
வேடம் இருந்தவா கண்டுகண்டு என்உள்ளம்
வாடும் இது என்னே, அன்னே என்னும்.
பொருளின்பம்
என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் என்றைக்கும் மணமகனாக இருப்பவர், நிறைந்த அழகைக் கொண்டவர், என் நெஞ்சத்தில் குடியிருப்பவர், தென்னாட்டை ஆள்பவர், பெருந்துறையின் தலைவர், மிகுந்த ஆனந்தம் தருகிறவர்’ என்கிறாள்.
*
என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் படமெடுத்து ஆடும் பாம்பை ஆபரணமாக அணிந்திருக்கிறார், புலித்தோலைக் கட்டியிருக்கிறார், திருநீறு பூசியிருக்கிறார், அவருடைய இந்தத் திருக்கோலத்தைச் சிந்தித்துச் சிந்தித்து என் உள்ளம் வாடுகிறது, இது ஏன்?’ என்கிறாள்.
சொல்லின்பம்
நித்தம்: எப்போதும்
மணாளன்: மணமகன்
நிரம்ப: நிறைய
அழகியர்: அழகைக் கொண்டவர்
சித்தம்: நெஞ்சம்
அன்னே: அன்னையே
அத்தர்: தலைவர்
அரப்பூண்: பாம்பாகிய ஆபரணம்
வேடம்: தோற்றம்/ அழகு
இருந்தவாறு: இருந்த தன்மை
என்னே: ஏனோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...