பகுதி 17 – அன்னைப் பத்து - 3
என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் நீண்ட கைகளை உடையவர்,


இறைவனையே தன் காதலன் என்று ஒரு பெண் கருதுகிறாள். அதை எண்ணி அவளுடைய அன்னை உரைப்பவை ‘அன்னைப் பத்து’ என்ற பாடல்களாக அமைந்துள்ளன. இதற்கு வேறொரு விளக்கமும் உண்டு. அந்தப் பெண் தன் அன்னையிடம் இறைவனைப் பற்றிச் சொல்கிறாள். அதைக் கேட்ட தோழி, அதனைப் பிறரிடம் சொல்கிறாள்.
இப்பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
நீண்ட கரத்தர், நெறிதரு குஞ்சியர்,
பாண்டி நல்நாடரால் அன்னே என்னும்,
பாண்டி நல்நாடர், பரந்துஎழு சிந்தையை
ஆண்டு அன்புசெய்வரால் அன்னே என்னும்.
*
உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர்
மன்னுவது என்நெஞ்சில் அன்னே என்னும்,
மன்னுவது என்நெஞ்சில், மால், அயன் காண்கிலர்
என்ன அதிசயம் அன்னே என்னும்.
பொருளின்பம்
என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் நீண்ட கைகளை உடையவர், நெருங்கிய சடையை உடையவர், பாண்டி நல்நாட்டைச் சேர்ந்தவர், பலவிதமாகப் பரந்து திரிந்துகொண்டிருந்த என் சிந்தனைகள் அனைத்தும் அவர் மீது குவியும்படி ஆட்சி செய்தவர், என்மீது அன்பு செலுத்துபவர்’ என்கிறாள்.
*
என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் யாருடைய நினைப்புக்கும் எட்டாத தன்மை கொண்டவர், சிறப்பு நிறைந்த உத்தரகோசமங்கையின் தலைவர், திருமால், பிரம்மனால்கூட அவரைக் காண இயலாது, ஆனால் அவரோ என் மனத்தில் நிலைத்திருக்கிறார், இது என்ன அதிசயம்!’ என்கிறாள்.
சொல்லின்பம்
கரம்: கை
நெறிதரு: செறிந்த
குஞ்சி: தலைமுடி
அன்னே: அன்னையே
சிந்தை: சிந்தனை
உன்னற்கு: சிந்திப்பதற்கு
சீர்: சிறப்பு
மன்னுவது: நிலைத்துநிற்பது
அயன்: பிரம்மன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...