ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 13 – திருப்பூவல்லி - 4

தேவர்களின் தலைவன் இந்திரன், திருமால், பிரம்மா, மற்றுமுள்ள தேவர்கள் எல்லாருக்கும் தலைவனாக நிற்கிறவன்

News image
Updated On :2 அக்டோபர் 2015, 10:04 am

என்.சொக்கன்

திரு + பூ + அல்லி என்பது ‘திருப்பூவல்லி’. இதுவும் பண்டைய மகளிரின் விளையாட்டுதான். அல்லி மலரைக் கொண்டு ஆடிப்பாடுவது. அதில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் அமைத்திருக்கிறார்.

தில்லையில் அருளப்பட்ட இந்தப் பகுதியில் இருபது பாடல்கள் உள்ளன.

89

பாடலின்பம்

பேராசையாம் இந்தப் பிண்டம்அற பெருந்துறையான்

சீர்ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான்,

கார்ஆர் கடல் நஞ்சை உண்டுஉகந்த காபாலி,

போர்ஆர் புரம் பாடிப் பூவல்லி கொய்யாமோ.

*

வானவன், மால்,அயன், மற்றும்உள்ள தேவர்கட்கும்

கோன்அவனாய் நின்று, கூடல்இலாக் குணக்குறியோன்

ஆன நெடும்கடல் ஆல்ஆலம் அமுதுசெய்யப்

போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ.

பொருளின்பம்

ஆசையால் வந்தது இந்தப் பிறவி. பிண்டமாகிய இந்த உடலும் பிறப்பும் அறுந்துவிடும்படி சிவபெருமான் செய்தான், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் அந்தப் பெருமான் தன்னுடைய சிறப்பான திருவடிகளை என் தலைமேல் வைத்தான்,

கரிய நிறத்துடன் கடலில் இருந்து நஞ்சு எழுந்து வந்தபோது, இந்த உலகத்தைக் காப்பதற்காக அதனை விருப்பத்துடன் உண்டவன், மண்டையோட்டைக் கையில் ஏந்திய காபாலி, போர் செய்து முப்புரங்களை அழித்தவன், அவனுடைய சிறப்புகளை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.

*

தேவர்களின் தலைவன் இந்திரன், திருமால், பிரம்மா, மற்றுமுள்ள தேவர்கள் எல்லாருக்கும் தலைவனாக நிற்கிறவன், அதேசமயம் யாரும் தன்னை நெருங்க இயலாதபடி சிறந்த இயல்புகள், அடையாளங்களைக் கொண்டவன் சிவபெருமான், அந்நாளில் கடலில் இருந்து தோன்றிய ஆலகாலம் என்ற நஞ்சை அவன் விரும்பி உண்டான், அது அமுதமாகவே மாறியது, அந்த அற்புதத்தை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.

சொல்லின்பம்

பிண்டம்: உடல்

சீர்: சிறப்பு

பிரான்: தலைவன்

கார்: கருமை

ஆர்: ஆர்க்கின்ற/ நெருங்குகின்ற/ நிறைகின்ற

உகந்த: மகிழ்ந்த

வானவன்: விண்ணோர்களின் தலைவன்/ இந்திரன்

அயன்: பிரம்மா

கோன்: தலைவன்

குறி: அடையாளம்

ஆல்ஆலம்: ஆலகாலம் என்கிற விஷம்

போனகம்: உணவு

ஆனவா: ஆன தன்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.