மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 433

மிக நீண்டதான கடல் அலறும்படியாகவும்

Updated On :10 டிசம்பர் 2016, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

திமிர உததி அனைய நரக செனனம் அதனில் விடுவாயேல்

 

திமிர(ம்): இருள், இருண்ட; உததி: கடல்; செனனம்: பிறவி;

செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே

 

மிடி: வறுமை;

அமரர் வடிவும் அதிக குலமும் அறிவு(ம்) நிறையும் வரவே நின்

 

அமரர் வடிவும்: தேவர்களைப் போன்ற வடிவமும்; அதிக குலமும்: நற்குலமும்; நிறையும்: ஒழுக்கமும்;

அருள் அது அருளி எனையும் மனதோடு அடிமை கொளவும் வர வேணும்

 

 

சமர முக வெல் அசுரர் தமது தலைகள் உருள மிகவே நீள்

 

சமரமுக(ம்): போர்முனை; வெல் அசுரர்: வெல்லப்பட்ட அசுரர்கள்;

சலதி அலற நெடிய பதலை தகர அயிலை விடுவோனே

 

சலதி: கடல்; பதலை: மலை, கிரெளஞ்ச மலை; அயிலை: வேலை;

வெம் அரவு அணையில் இனிது துயிலும் விழிகள் நளினன் மருகோனே

 

வெம்: கொடிய; அரவு: பாம்பு; அணை: படுக்கை; நளினம்: தாமரை; நளினன்: தாமரையைப் போன்ற; விழிகள் நளினன்: தாமரையை போன்ற விழிகளை உடையவன், திருமால்;

மிடறு கரியர் குமர பழனி விரவு அமரர் பெருமாளே.

 

மிடறு: தொண்டை, கண்டம்; விரவு: கூடி, கலந்து, சேர்ந்து;

திமிர வுததி யனைய. நரகசெனன மதனில் விடுவாயேல்… இருண்ட கடலைப் போன்றதும், நரகத்தை ஒத்ததுமான பிறப்பிலே என்னை விடுவாயானால் (என்னை பிறக்கச் செய்வாயானால்),

செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே...... செவிட்டுத் தன்மையோ குருட்டுத் தன்மையோ, வடிவத்தில் குறைவோ—அங்கஹீனமோ—வறுமையோ என்னைச் சிறிதும் அணுகாமல்,

அமரர் வடிவும் அ திக குலமும் அறிவு நிறையும் வரவே... தேவர்களைப் போன்ற வடிவமும், உயர்ந்த குடிப்பிறப்பும், அறிவும், ஒழுக்கநிலையும் எனக்கு வருமாறு,

நின் அருள தருளி எனையு மனதோடு அடிமை கொளவும் வரவேணும்... உன்னுடைய திருவருளைத் தந்தருளி, அடியேனிடத்திலும் மனம் இரங்கி, அடிமையாக ஆட்கொள்வதற்காக வரவேண்டும்.

சமர முகவெல் அசுரா தமது தலைக ளுருள... போர்முகத்திலே வெல்லப்பட்டவர்களாகிய அசுரர்களுடைய தலைகள் உருளும்படியாகவும்;

மிகவேநீள் சலதி யலற நெடிய பதலை தகர.. மிக நீண்டதான கடல் அலறும்படியாகவும்; நீண்டதும் உயர்ந்ததுமான கிரெளஞ்சமலை தகர்ந்து பொடியாகும்படியாகவும்;

அயிலை விடுவோனே... கூர்மையான வேலை எறிந்தவனே!

வெமர வணையி லினிது துயிலும் விழிகள் நளினன் மருகோனே... கொடிய பாம்பான ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் மருமகனே!

மிடறு கரியர் குமர... கறுத்த கண்டத்தை உடைய நீலகண்டனாரின் குமாரனே!

பழநி விரவு மமரர் பெருமாளே.... பழநியிலே வந்துகூடி தொழுகின்ற தேவர்களுடைய பெருமாளே!

சுருக்க உரை

போரிலே வெல்லப்பட்ட அசுரர்களுடைய தலைகள் விழுந்து உருளுமாறும்; கடல் அலறிக் கதறுமாறும்; நெடிய கிரெளஞ்ச மலை பொடியாகுமாறும் கூரிய வேலை எறிந்தவனே!  கொடிய பாம்பின்மேல் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் தாமரைக் கண்ணனான திருமாலுடைய மருமகனே!  கறுத்த கண்டத்தை உடைய நீலகண்டரின் குமாரனே!  உன்னைத் தொழுவதற்காகப் பழநியில் திரள்கின்ற தேவர்களுடைய பெருமாளே!

இருண்ட கடலைப் போன்றதும்; நரகத்துக்கு ஒப்பானதுமான பிறவியை எனக்களித்து அதில் என்னைச் செலுத்துவாயானால் (எனக்கு இனி பிறவி நேர்ந்தால்), குருடு, செவிடு, அங்கஹீனம் முதலான உடற் குறைகள் இல்லாமலும்; நல்ல அறிவுடனும்; நற்குடிப் பிறப்புடனும்; ஒழுக்கத்துடனும் எனக்கு ஏற்படுமாறு அடியேனுக்கு உன்னுடைய திருவருளைப் புரிந்து, அடிமையாக ஆட்கொள்ள (அந்தப் பிறவியிலேனும்) வரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.