சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(05.04.1988)தேர்தல் கூட்டு பற்றி இப்போது சிந்தனை இல்லை - மூப்பனார்

இ.காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரையில் எப்போதுமே தேர்தலைச் சந்திக்க தயார் நிலையில் உள்ளது. தேர்தல் கூட்டு பற்றிய சிந்தனை இப்போது இல்லை. இப்போது அது ஒரு பிரச்னையே இல்லை என்று தமிழ்நாடு இ.காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார் கூறினார்.

Updated On :4 ஏப்ரல் 2015, 6:57 am

இ.காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரையில் எப்போதுமே தேர்தலைச் சந்திக்க தயார் நிலையில் உள்ளது. தேர்தல் கூட்டு பற்றிய சிந்தனை இப்போது இல்லை. இப்போது அது ஒரு பிரச்னையே இல்லை என்று தமிழ்நாடு இ.காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார் கூறினார்.

தேர்தலையொட்டி இந்திரா காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இப்படியில்லை என்றார். தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். வரும்போது வரட்டும். எப்போது தேர்தலை நடத்துவது என்று முடிவு செய்வது தேர்தல் கமிஷன் ஆகும் என்று மூப்பனார் சொன்னார்.

தமிழ்நாட்டில் மக்கள் ஒரு மாறுதலை விரும்புகிறார்கள். இ.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான, சாதகமான சூழ்நிலை உருவாகி வருகிறது என்று தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நான் சுற்றுப்பயணம் செய்தபோது தெரிந்துகொண்டேன் என்று மூப்பனார் கூறினார்.

தேர்தல் கூட்டு பற்றிய தொடர்ந்த பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். தேர்தல் கூட்டு பற்றி மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி நான் பதில் சொல்லப்போவதில்லை. தேர்தல் கூட்டு உண்டா, யாரோடு என்பதெல்லாம் தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்த பிறகு யோசிக்க வேண்டிய விஷயங்கள். என்னுடைய முதல் கடமை, இ.காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி தேர்தலில் வெற்றி ஈட்டித் தர வேண்டியது. இதற்குப் பிறகுதான் யாரோடு கூட்டணி என்பது உள்ளிட்ட பிரச்னைகளைச் சிந்திக்க முடியும் என்றார் மூப்பனார்.

இ.காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று கட்சி ஊழியர்கள் மத்தியில் பரவலாக கருத்துள்ளதா என்று கேட்கப்பட்டது. எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னுடைய சொந்தக் காலில் வெற்றி பெறுவதை விரும்பும். இது ஒரு லட்சிய சிந்தனையாகவும் இருக்கலாம். எனவே, கட்சி ஊழியர்கள் அப்படிப்பட்ட கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ்நாட்டில் அகில இந்திய இந்திரா காங்கிரஸ் மாநாடு சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆயிரத்தி இருநூறு பேர் பிரதிநிதிகளாகக் கலந்துகொள்வார்கள் என்று மூப்பனார் தெரிவித்தார்.

காங்கிரஸ் மாநாட்டை தென் மாநிலங்களில் ஒன்றில் நடத்துவது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் விருப்பம் தெரிவித்து வந்தோம். அந்த வகையில், இந்த மாநாடு தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இங்கு நடத்த இசைவு தெரிவித்ததற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பிரதம மந்திரியுமான ராஜீவ் காந்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் மூப்பனார்.

1954-ல் ஆவடியிலும், பின்னர் 1951-ல் மதுரையிலும் மாநாடு நடைபெற்றது. அதற்குப் பிறகு இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்றார் மூப்பனார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.