சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(17.04.2000)அதிமுக பொதுச் செயலாளர் பதவியை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன் : ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலர் பதவியில் நான் என்றும் தொடர்வேன்; அதை வேறு ஒருவருக்கு விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Updated On :16 ஏப்ரல் 2015, 12:36 pm

அதிமுக பொதுச் செயலர் பதவியில் நான் என்றும் தொடர்வேன்; அதை வேறு ஒருவருக்கு விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

உலகில் எந்த அரசியல் இயக்கத் தலைமையும் கிளை அமைப்பு நிர்வாகிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதில்லை. கடந்த ஜனவரி 18 முதல் தொண்டர்களுடன் கலந்துரையாடி அவர்களது உணர்வுகளை நான் அறிந்துவருகிறேன்.

கட்சி அமைப்புத் தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக கிளைக் கழகச் செயலர்கள் தெரிவித்தார்கள். நான் பெரிதும் நம்பிய தலைமைக் கழக நிர்வாகிகள் மீது ஆதாரத்துடன் குற்றம் சாட்டினார்கள். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்கள்.

அமைப்புத் தேர்தல் நடத்திய சம்பந்தப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் அமர்ந்திருக்க, கிளைக் கழகச் செயலர்கள் அவர்களைக் கேள்வி கேட்டு, வெட்கித் தலைகுனியச் செய்தனர்.

தலைமைக்கும் தொண்டருக்கும் பாலமாக இருக்க வேண்டியவர்கள் பாதகமாக நடந்து கொண்டதைப் பல சிறப்புப் புலனாய்வு அமைப்புகள் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டுதான் நான் நடவடிக்கை எடுத்தேன். இதை வரவேற்று தந்திகள் வருகின்றன.

வெளியேற்றப்பட்டவர்கள் என்னைப் பைத்தியம் என்கிறார்கள். இவர்களுக்குத் பதவி தந்து பக்கத்தில் வைத்து பணியாற்றச் செய்தபோது எனக்கு சுயநினைவு இருந்தது. இவர்களது துரோகத்துக்காக வெளியேற்றியபோது எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாம்.

நான் எந்த ஒரு குடும்பத்தையும் நம்பியிருக்கவில்லை. தொண்டர்களை நம்பி இருக்கிறேன். பொது மக்களை நம்பி இருக்கிறேன்.

சசிகலா குடும்பப் பெண். எனக்கு உதவியாக இருந்தார் என்பதால் அவர் மீதும் தினகரன் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் வைக்கப்பட்டனர். எனக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்று சொன்னாலாவது அவர்களுக்கு இழைக்கப்படும் தீங்கு நிறுத்தப்படும் என்று கருதினேன். அப்படிச் சொன்ன பிறகும் மத்திய, மாநில அரசுகள் அவர்களை விட்டு வைக்கவில்லை.

பொதுச் செயலர் பதவியை வேறு யாருக்கோ வழங்க நான் விரும்புகிறேனாம்! அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் என்னைப் பொதுச் செயலராக ஏகமனதாகத் தேர்வு செய்துள்ளனர். அப்பதவியில் நான் என்றும் தொடர்வேன். அதை வேறு ஒருவருக்கு விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை.

வரும் சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத் தொகுதிக்கு சீட்டு வாங்கித் தருகிறேன் என்று யாராவது பணம் கேட்டால் அவர்களிடம் தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மோசடியாளர்களிடம் யாரும் ஏமாந்து போனால் அதிமுக பொறுப்பல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.