பட்டதாரி:  கவிஞர் " இளவல் "  ஹரிஹரன்

Updated on
1 min read

தொடக்கநிலைப் பள்ளியிலே அகரம் கொண்டு
      தொடங்குகின்ற எழுத்துகளை வரிசை யாக
தடையிலாது பயின்றபடி தான்வ ளர்ந்து
      தமிழ்முதலாய் பிறமொழியும் பலவும் கற்று
முடங்கிடாமல் உயர்கல்வி மேலும் பெற்று
      முன்னேறும் ஆசையிலே கல்லூ ரிக்குள்
அடங்கிடாத மேல்நிலையில் பட்டம் வாங்கும்
      ஆர்வமுடன் பலகற்று அணிசெய் கின்றார்.

பட்டதாரி என்றுபோற்ற கவலை தீர
       படித்தபயன் சேர்வதற்கு வேலை தேடும்
கட்டமதை அடைகின்றார் மாண வர்கள்.
       கடினவுழைப் பதனாலே போட்டித் தேர்வை
இட்டமுடன் எதிர்கொண்டு வெற்றி காண
      இசைகின்றார் காலவெள்ளம் கரைத்துக் கொள்ள,
நட்டமிலா முயற்சிக்குத் துணையாய் நிற்கும்
       நம்பிக்கை யொன்றேதான் வழியைக் காட்டும்.

படித்தறியா மேதைகளும் உண்டு, பாரில்
      பட்டதாரி என்றுசொல்ல பெருமை கூடும்.
முடிவதுவோ கல்விக்கோ என்றும் இல்லை,
      முன்னேற்ற வாழ்விற்கோ அதுவே எல்லை,
அடிப்படையு ரிமையாக ஆகும் கல்வி
       அடித்தட்டு மக்களினை மேலு யர்த்தும்
கொடியொன்றே குடியாள வேண்டும், இங்கே
       கொண்டகல்வி வேலைதரும் நிலைகா ணட்டும்!

வணிகநோக்கில் பொருளாகிப் போன கல்வி
        வாங்குந்தி றன்கொண்ட மனிதர் வாழ்வின்
அணியாகிப் போனதனால் அவலந் தானே..
        அதைவாங்க முடியாத ஏழை மக்கட்
பிணியாகிப் போகலாமோ கல்வி, ஆயின்
        பிழையாகிப் போய்விடுமே சமுதா யத்தில்.
இனியென்ன விதிசெய்வோம் எல்லோ ருக்கும்
        எழுதுகல்வி பொதுவென்ற கொள்கை செய்வோம்!   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com