ஜன்னலில் தெரிவதெலாம் நிலவென்று எண்ணுவதும்
சழக்கென்றே உணரவேண்டும் ;
சமுதாயம் சீர்கெட்டுப் போவதை இதுகாட்டும்
ஜனங்கள்மனம் மாறவேண்டும் !
உன்னதம் என்றிந்த எண்ணமதும் ஆகிடுமோ ,
உற்றநற் பண்புமிதுவோ ;
உயர்வாக இதுதன்னைத் திரைதன்னில் காட்டுவதும்
ஊர்கெட்டு நாசமுறவோ ?
இன்னதனை உணராதப் போதினில் கிட்டுவதும்
இழிவன்றி வேறுயெதுவோ?
இளங்கன்று பயந்தனை அறியாது என்பார்கள்,
இன்னதும் அத்தகையதோ ?
மென்மனம் தறிகெட்டு அலைபாயும் , எல்லைதனை
மீறாமல் இருக்கவேண்டும் ;
மேலானக் காதலின் இலக்கணம் இதுவல்ல ;
மிகையிலா உண்மையிதுவே !
தென்னையிளங் கீற்றின் நடுவே
தெரிகின்ற நிலவே அழகு;
இன்னதற் கிணையென உலகில்
எதனைநாம் சொல்லவும் தகுமோ ?
ஜன்னலின் வழியாய்த் தெரிவதோர்
சிகப்புநிலா என்றிடும் போதில்
அன்னதே பேரழ கென்பதாம்
அரும்புகளின் எண்ணந் தனிலே !
வண்ணத்துப் பூச்சியென வானமதில் சிறகடிக்கும்
எண்ணமதும் நம்மின் இளமையிலே ---- ஜன்னல்
நிலவுதனின் எழில்தனிலே நெஞ்சமதைப் பறிகொடுக்க ;
உலகவரின் இயல்பான உணர்வு !