என் ஓட்டம் என் இலக்கு:   கவிஞர் " இளவல் " ஹரிஹரன்,

Updated on
1 min read

இலக்கில்லாப் பயணங்கள் பயனே இல்லை
      எய்கின்ற அம்புக்கும் இலக்கு தேவை
உலகினிலே ஒவ்வொருவு யிர்க்கும்  நோக்கம்
     உண்டென்று சொன்னாலே மறுப்பார் உண்டோ
மலருக்கும் மணம்வீசி மகிழ வைத்து
    மங்கையர்தம்  கூந்தலேறும் நோக்க முண்டு
நிலவுலகில் மனிதர்க்கோ இலக்கு வேண்டும்
    நின்றிடாது அதைநோக்கி யோட வேண்டும்.

என்இலக்கு எதைநோக்கி என்னும் போக்கில்
    எள்ளளவும் பிசகிடாத தெளிவு வேண்டும்
முன்னோக்கிச் செல்கின்ற பார்வை வேண்டும்
     முப்போதும் அதிற்கவனம் செலுத்த வேண்டும்
நன்னோக்கம் இலக்கிற்கு நாளும் வேண்டும்
      நம்வாழ்வின் வெற்றிக்குச் சேர வேண்டும்.
இந்நோக்கில் இலக்கடையும் ஓட்டம் வேண்டும்
      இடைவிடாத சிந்தையதிற் காட்ட வேண்டும்.

வெள்ளோட்டம் விடுவதற்கு வேடிக் கையா
       வீணாகத் திரிவதிலே வாடிக் கையா
துள்ளாட்டம் போட்டுவாழ்க்கை தீரு மட்டும்
       துயராட்டம் வாழ்வதென்ன வாழ்க்கை யா சொல்!
தள்ளாடும் முதுமையினை அடையு முன்னம்
       தனித்துநிற்கும் பிறவியென அடையா ளத்தை
உள்ளோடும் நோக்கமென உறுதி கொள்வாய்
        ஓடு!ஓடு! அதைநோக்கி வெற்றி காண்பாய்!             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com