கண்டேன் வண்ண மயமெல்லாம் கற்றேன் இன்ப உறவெல்லாம்
உண்டேன் இனிய பொழுதெல்லாம் உறங்கி எழுந்தேன் ஊரெல்லாம்
விண்டேன் அரிய பொருளெல்லாம் வியந்தேன் அறிந்த இடமெல்லாம்
கொண்டேன் வழியே என்னோட்டம் தூய நிலமே என்னிலக்கு!
ஒருநா(டு) என்று காண்பேனோ? ஒருமை உணர்வு எங்குண்டோ?
திருநா(டு) காண வழியுண்டோ? திரும்பி வாழ்த்த நெறியுண்டோ?
பெருநா(டு) பெருமை இனியுண்டோ? பெருகும் மக்கள் நலமுண்டோ?
ஒருநாள் கூட்டும் என்னோட்டம்! ஒன்றை நோக்கும் என்னிலக்கு!
பிச்சைப் பழக்கம் இனிவிட்டால் பெருகும் ஊழல் தானொழியும்
இச்சைப் பழக்கும் மதுவேண்டாம் ஏற்றம் பறிக்கும் வினைவேண்டாம்
நச்சு உமிழும் செயல்வேண்டாம் நன்மை அழிக்கும் மதிவேண்டாம்
கச்சைக் கட்டி எழவேண்டும் கடமை செய்து வாழ்வோமே!
மக்கள் உயிரைக் காக்கவேண்டும்! மலரும் வாழ்வைப் போற்றவேண்டும்!
மக்கள் ஆட்சி உண்மையென்றால் வளமைக் காட்டும் அரசுவேண்டும்!
மக்கள் மொழியே ஆளவேண்டும்! மாந்தர் உழைப்புக் கூடவேண்டும்!
மக்கள் உணர்வை மதிக்கவேண்டும்! மடமை வழக்கம் ஒழியவேண்டும்!
மக்கள் எல்லாம் ஒன்றாக மனித நேயம் நன்றாகும்!
அக்கம் பக்கம் இசைவாக அன்பின் நேயம் விரிவாகும்!
நக்கல் நலிவும் நீங்கிடவே நாட்டை இணைக்கும் அறமாகும்!
சொக்கத் தங்கம் என்னிலக்கு! சொந்தம் காணும் என்னோட்டம்!