கல்லெடுத்து நா(ர்)உறிப்பார்;
காற்றினையும் நஞ்சாக்கிப்
பொல்லாத செயல்விளைப்பார்;
புண்ணில்வேல் பாய்ச்சிடுவார்;
எல்லோர்க்கும் உள்ளவற்றை
எனக்கென்று பறித்திடுவார்;
வல்லமையால் தீங்கிழைக்க
வாழ்வுபோர்க் களமாகும்!
பொதுவான விடியலினைப்
பதுக்கிடுவார் தனதென்று;
மதுவினிலே குடியிருப்பார்;
மாண்புகளைக் கற்பழிப்பார்;
பதுமையெனப் பேசிடாத
பாமரரின் உழைப்புறிவார்;
சதுரங்கக் காய்களாக
சாகடிப்பார் நல்வினைகள்!
இயல்பான இயற்கைவளம்
இயன்றவரை திருடிடுவார்;
செயற்கைகளால் மண்ணுயிரைச்
சிதைத்திடுவார்; நலங்கெடுப்பார்;
வயல்பயிராய்த் தீவினைகள்
விளையவைத்து உயிரறுப்பார்;
பழியாகி வாழ்க்கையெனும்
போர்க்களமாய் மாறிற்றே!
கல்லாரும் இல்லாரும்
செல்வந்தர் அரசியலார்
பொல்லாரும் உள்ளதனால்
எல்லையில்லா வேறுபாட்டில்
நல்லறத்து வாழ்க்கையெனும்
நிலமின்று போர்க்களமாய்
அல்லலுறும் நிலையதனை
அமுதமென மாற்றுவமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.