சுயத்தை
சோதித்துப் பார்த்துக் கொள்ள
சுதந்திரம் இருந்தும்
சும்மாவே இருக்கின்றோம்...
பொய் சூது வஞ்சம்
யாவும்
மெய்யாக மெய் மறைக்க
புரண்டபடி ஆடுகிறோம்
புலன்களோடு...
புன்னகையை உதட்டில் ஒட்டி
புரட்டின் முட்களை
புலன்களால் போர்த்திக் கொண்டு
பூனைகளாய் ஆகின்றோம்
பூகோளம் இருண்டதென்று...
கோவில் கொத்தளத்தில்
கும்பிடப் போகாமல்
நாவில் குருதிச் சொட்டும்
காம வெறிக்கு
கடவுள் முன்னாலேயே
பூவைப் பெய்த்தெறிதல்
பாவமென்று தெரியாதோ...
சிந்தனைச் சரிதலும்
சண்டாள எண்ணங்களில்
சரணடைந்து மகிழ்தலும்...
சாமிக்கு முன்னாலே
சாதிகளைப் பேசுவதும்
சந்தியிலே மதங்களை
சம்ஹாரம் செய்வதுவும்...
சமதர்மப் பொதுநலங்கள்
சங்கமிக்கச் செய்யாமல்
தீமூட்டி ஆர்ப்பறித்தால்
திசைகள் ஏசாதோ...
அன்பின் அச்சாணியில்
அகிலம் சுழலுவதை
மறுப்பாறும் உண்டோ...
ஆனந்த இன்பத்தை
வெறுப்பாரும் உண்டோ...
மன்பதை வாழ்வோரே
மனதில் இதை நிறுத்திப்பார்த்து
ஒரு முறையேனும் சிந்தித்ததுண்டா...!?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.