பிறக்கும் போது ஆரம்பித்த
பாச மிகுந்த அழுகையின்று
இறக்கும் வரையில் தொடர்கிறதே!
இன்னல் வந்து வாட்டியேதான்
அறமு(ம்) அற்ற நிலையினிலே
அன்றா டுந்தான் வதைக்கிறதே!
உறவுக ளெல்லாம் சூழ்ந்திருக்க
ஒருமுறை யேனும் வாழவேண்டும்!
உயர்ந்த கல்வி,உயர்பதவி,
உயர்ந்த செல்வம், நல்மனையாள்,
உயர்ந்த குணத்து நன்மக்கள்,
உறவுகள் சூழ்ந்து உன்னதத்து
இயற்கை போன்ற இயல்பான
இன்பம் நிறைந்த வாழ்க்கையினை
இயல்பாய் இனியொரு முறையேனும்
இப்புவி தன்னில் வாழவேண்டும்!
இன்பத் தமிழின் சீர்கலைகள்,
இன்பத் தமிழின் இலக்கணங்கள்,
இன்பத் தமிழின் இலக்கியங்கள்,
எல்லாம் முழுதும் கற்றுயர்ந்து,
இன்பத் தமிழின் பண்பாட்டில்
இன்பத் தமிழின்அடையாளம்
என்றும் காத்து உண்மையாக
ஒருமுறை யேனும் வாழவேண்டும்!
வள்ளல் குணமும் வழிந்திடாத
வளம்நி றைந்த நெஞ்சமுடன்
அள்ள அள்ளக் குறைந்திடாத
ஆற்றல் பெற்று நல்வினைகள்
உள்ளந் தோறும் விதைக்கின்ற
ஊக்கமும் ஆக்கமும் உடையவனாய்
கள்ள மின்றி வாழவேண்டும்;
கோலோச் சியொரு முறையேனும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.