(அதிகை வீரட்டானம் - பண்: கொல்லி)
பின்னணி
விழுப்புரம் மாவட்டத்தில் திருவாமூர் என்ற தலத்தில், புகழனார் என்பவருக்கும் மாதினியார் என்பவருக்கும், மகனாக சைவ வேளாளர் குலத்தில் அவதரித்தவர் மருள்நீக்கியார். தனது சிறுவயதில், பெற்றோர்கள் இருவரையும் இழந்த மருள்நீக்கியாரின் சகோதரி திலகவதியார் மணமுடிக்க இருந்த கலிப்பகையார், போர்க்களத்தில் மாண்டார். இவ்வாறு தனது நெருங்கிய சொந்தங்களை சிறு வயதில் இழந்து, வாழ்க்கையில் பிடிப்பு ஏதும் இல்லாத நிலையில் இருந்த மருள்நீக்கியாரை, சமண சமயத்துக் கொள்கைகள் ஈர்த்தன. துறவினை மேற்கொண்ட மருள்நீக்கியார், சமயங்களின் உண்மை நிலைகளை தெரிந்துகொள்வதற்காக சமண சமயம் சார்ந்தார் என்று கூறும் சேக்கிழார், இறைவனின் அருள் கூடாமையால், அப்போது சமண சமயம் சார்ந்தார் என்று பெரிய புராணத்தில் கூறுகிறார்.
நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள் ஆனவற்றின்
நல்லாறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால்
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்.
தனக்கு இயல்பாக இருந்த அறிவாற்றலால், சமண சமயக் கொள்கைகளை எளிதில் கற்றுத் தேர்ந்த மருள்நீக்கியார், சமணர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தருமசேனர் என்று அழைக்கப்பட்டு, கடலூரை அடுத்துள்ள பாடலிபுத்திரத்தில் வாழ்ந்து வந்தார். கொல்லாமை என்பது சமண சமயத்தின் முக்கியமான கொள்கை.
ஆனால், ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்து வந்த சமணர்கள், தங்களது மதத்தினை பரப்புவதற்காக, அடுத்த மதத்தவரைhf கொல்லவும் தயங்காதவர்களாக வாழ்ந்து வந்த நிலையினை உணர்த்தும் பொருட்டு, அவர்களிடையே இருந்த கொல்லாமை கொள்கை மறைந்தது என்று சேக்கிழார் நயமாகக் குறிப்பிடுகிறார்.
தனது தம்பி தன்னை விட்டு நீங்கிய பின்னர், திலகவதியாரும் துறவு நிலை மேற்கொண்டு, அருகில் இருந்த திருவதிகை நகர் வந்து, சிவபிரானின் திருக்கோயிலில் அலகிடுதல் (பெருக்கி சுத்தம் செய்தல்), மெழுகிடுதல், பூக்கள் பறித்து மாலைகள் தொடுத்து இறைவனுக்கு அணிவித்தல் போன்ற தொண்டுகள் செய்து வந்தார்.
சமண சமயம் சார்ந்த தனது தம்பி, மறுபடியும் சைவ சமயம் வந்து சேர்வதற்கு சிவபிரானின் அருள் என்று கூடுமோ என்று கவலையுடன் வாழ்ந்து வந்த அவர். சிவபிரானிடம் நாளும் தனது கவலையை தெரிவித்து வந்தார். ஒருநாள், சிவபிரான் அவரது கனவில் தோன்றி, முன்னமே உமது தம்பி முனியாகி எனை அடையத் தவம் செய்தான்; இப்போது நான் அவனுக்கு சூலை நோய் அளித்து ஆட்கொள்வேன் என்று, சென்ற பிறவியில் மருள்நீக்கியார் செய்த தவத்தைக் குறிப்பிட்டுக் கூறினார். திலகவதியார் மகிழ்ச்சி அடைந்து, அந்த நன்னாளுக்காகக் காத்திருந்தார்.
இதனிடையில், தருமசேனருக்குக் கொடிய சூலை நோய் ஏற்பட்டது. கடுமையான வயிற்று வலியால் துடித்த அவருக்கு, சமண சமய மந்திரங்களும் தந்திரங்களும், மற்ற மருத்துவமும் பலன் ஏதும் அளிக்கவில்லை. தமது தமக்கையார் தனது அருகில் இருந்தால் ஏதேனும் நல்ல தீர்வு சொல்வார் என்ற நம்பிக்கையில், தமது தமக்கையாரை தான் இருக்கும் இடத்துக்கு அழைத்து வர, தனது பணியாளன் ஒருவரை அனுப்பினார்.
சிவபிரான் தனது கனவில் கூறிய வார்த்தைகளால், தனது தம்பி சூலை நோய் கொடுக்கப்பட்டு சிவபிரானால் ஆட்கொள்ளப்படுவார் என்ற நம்பிக்கையில் இருந்த திலகவதியார், பணியாளர் தனது இல்லம் வந்தவுடன், ஏதேனும் தீங்கு உளதோ என்று ஆர்வத்துடன் கேட்டார். பணியாளர், தருமசேனர் சூலை நோயால் வருந்துவதை கூறி, தன்னுடன் பாடலிபுத்திரம் வருமாறு தருமசேனர் சார்பாக வேண்டினார். ஆனால், நன்றியில்லாத சமணர்கள் வாழும் மடத்துக்குத் தான் வரமாட்டேன் என்று திலகவதியார் மறுத்தார்.
தனது உதவியாளர் மூலம் தமக்கை அளித்த இந்தப் பதிலைக் கேட்ட தருமசேனர் முதலில் வருந்தினார். சமணர்கள் செய்த மருத்துவங்கள் மந்திரங்கள் ஏதும் பலனளிக்காத நிலையில், இரவோடு இரவாக யாரும் அறியாமல், தமது தமக்கையார் இருக்கும் திருவதிகை சென்று அடைவது என்று தீர்மானம் செய்தார். இவ்வாறு முடிவு எடுத்தமைக்கு, அந்த நேரத்தில் சிவபிரான் திருவருள் கூடியதே காரணம் என்று சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்.
அவ்வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான்
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்
ஒவ்வா இப்புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச்
செவ்வாறு சேர் திலகவதியார் சேர்வன் என
நள்ளிரவில் தமக்கையார் இருந்த திருமடம் வந்து சேர்ந்தவர், திலகவதியாரின் திருவடிகளில் வீழ்ந்து, சூலை நோயினால் வருந்தி உம்மை வந்து சார்ந்தேன்; நான் வாழ்க்கையின் மாயங்களில் மயங்காமல் உய்வதற்கான வழியை நீர் காட்டியருள வேண்டும் என்று வேண்டினார். உடனே திலகவதியார், சிவபிரானின் கழல்களை வணங்கி அவருக்குப் பணி செய்து உய்யலாம் என்று கூறித் தேற்றி, நமச்சிவாய என்ற மந்திரத்தை ஓதி அவருக்கு திருநீறு அளித்தார். தமக்கையார் அளித்த திருநீற்றினை, பெருவாழ்வு வந்தது என்று பெற்றுக்கொண்ட மருள்நீக்கியார், தமது திருமேனி முழுதும் அணிந்துகொண்டார்.
இதனிடையில் பொழுது விடியவே, திருவலகும், திருமெழுக்கும், தோண்டியும் கொண்டு திருக்கோயில் சென்ற திலகவதியாரைப் பின்தொடர்ந்து, மருள்நீக்கியாரும் சென்றார். திருக்கோயிலை வலம் வந்த மருள்நீக்கியார், தரையில் விழுந்து பெருமானை வணங்கிய பின்னர், அவரது சன்னதியில் நின்று கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார். இந்தப் பதிகம், உடல் குற்றமாகிய சூலை நோயினையும், உயிர்க் குற்றமாகிய பிறவிப் பிணியையும் தீர்க்கும் என்று சேக்கிழாரால் புகழப் படுகிறது.
மூவர் பாடிய தேவாரப் பாடல்களில், இந்தப் பதிகம்தான் காலத்தால் முந்தையது ஆகும். கொல்லிப் பண்ணில் பாடிய இந்தப் பதிகத்துக்கு அருள்புரிந்த சிவபிரானை, கொல்லியாம் பாட்டு உகந்தார் என்று, திருக்குறுக்கை தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்தில் நாவுக்கரசர் குறிப்பிடுகிறார். குறுக்கை வீரட்டத்து இறைவனின் புகழைப் பாடி மகிழ்ந்த அப்பர் பிரானுக்கு, அதிகை வீரட்டனாரின் நினைவு வந்தது போலும்.
கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார்
நெல்லினால் சோறு உணாமே நீள் விசும்பு ஆளவைத்தார்
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி
கொல்லியாம் பண் உகந்தார் குறுக்கை வீரட்டனாரே
திருநாவுக்கரசு நாயனார், தனது முந்தைய பிறவியில் கயிலை மலையின் கீழ் ராவணன் நசுக்குண்டு இடர்ப்பட்டபோது, அவனுக்கு சங்கரன் சாமகானப் பிரியன் என்ற விவரத்தைச் சொல்லி, சாமகானம் பாடி தனது இடரிலிருந்து நீங்குமாறு ஆலோசனை கூறிய முனிவர் என்றும், அந்தக் கொடியவனான ராவணனுக்கு உதவி செய்ததற்குத் தண்டனையாக இந்தப் பிறவியில் சூலை நோய் பெற்றார் என்று சிலர் கருதுகின்றனர் என்றும், இந்தப் பிறவியில் கோதாவரிக் கரையில் தன்னிடம் சமய உண்மை வினவிய முனிவர்களிடம் சமண சமயமே உயர்ந்தது என்று கூறி சைவ சமயத்தை இழிவாகப் பேசி சிவ அபராதம் புரிந்ததற்கான தண்டனையாக சூலை நோய் வாய்த்தது என்றும் வேறு சிலர் கருதுவதாகவும், சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணியம் தனது திருத்தொண்டர் புராணம் விளக்க உரையினில் கூறுகிறார்.
பாடல் 1
கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே…
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கூற்று = கூற்றுவன் என்பதன் சுருக்கம். இயமன் என்று பொருள். உடலுடன் ஒட்டி இருக்கும் உயிரினைக் கூறு செய்து பிரித்தலின் கூற்றுவன் என்று வந்த காரணப் பெயர். ஏற்றாய் என்பதற்கு ஏற்றினை வாகனமாக உடையவன் என்றும், என்னை அடிமையாக ஏற்ற இறைவன் என்றும் இரண்டுவிதமாகப் பொருள் கொள்ளலாம்.</p><p align="JUSTIFY">விலக்ககிலீர் = விலக்காமல் இருக்கின்றீர்கள். கில் என்ற சொல், எதிர்மறைப் பொருளைத் தரும். கில்லேன் என்ற சொல்லை எதிர்மறைச் சொல்லாக, அப்பர் பெருமான், சுந்தரர் மற்றும் மணிவாசகர் கையாண்டுள்ளனர்.</p><p align="JUSTIFY">துடக்குதல் = சுருட்டுதல். மூளை, எலும்பு ஆகிய உறுப்புகளை நரம்பு எனும் கயிற்றால் கட்டி தோற்சட்டை போர்த்த உடலினுள் இருக்க முடியாமல் தவிப்பதாகக் கூறும் மணிவாசகர், இருக்க கில்லேன் என்று இங்கே கூறுவதை நாம் உணரலாம்.</p><p align="JUSTIFY">குப்பாயம் = மேற்சட்டை.</p><p align="JUSTIFY">மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த</p><p align="JUSTIFY">குப்பாயம் புக்கு இருக்க கில்லேன் கூவிக் கொள்ளாய் கோவேயோ</p><p align="JUSTIFY">எப்பாலவர்க்கும் அப்பாலாம் என் ஆர் அமுதேயோ</p><p align="JUSTIFY">அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே</p><p align="JUSTIFY">தான் தெளிந்து உணரமாட்டாத நிலையில் இருப்பதை தெளிய கில்லேன் என்று அப்பர் பிரான், கடவூர் வீரட்டம் பதிகத்தின் ஆறாவது பாடலில் கூறுவது இங்கே நினைவுகூரத்தக்கது.</p><p align="JUSTIFY">பழியுடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து</p><p align="JUSTIFY">வழியிடை வாழ மாட்டேன் மாயமும் தெளிய கில்லேன்</p><p align="JUSTIFY">அழிவுடைத்தாய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டுக்</p><p align="JUSTIFY">கழியிடைத் தோணி போன்றேன் கடவூர் வீரட்டனீரே</p><p align="JUSTIFY">கொடுமை பல செய்தன என்ற தொடர் மூலம், தான் சமண சமயத்தைச் சார்ந்து இருந்தபோது தான் செய்த கணக்கற்ற சிவ அபராதங்களுக்கு (என்னவென்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு) வருந்தும் மருள்நீக்கியார், இனிமேல் தான் இரவும் பகலும் பிரியாது சிவபிரானை வணங்குவேன் என்றும் இங்கே கூறுகிறார்.</p><p align="JUSTIFY">தோற்றாது = வெளியே தோன்றாமல், என்ன காரணத்தால் தனக்கு சூலை நோய் வந்தது என்று எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இங்கே அப்பர் பிரான் கூறுகிறார். நோய் நாடி நோய் முதல் நாடி, மருத்துவம் செய்வது பண்டைத் தமிழர்களின் பழக்கம். ஆனால் இங்கே, சூலை நோயின் மூலம் தெரியாத காரணத்தால், எவராலும் அந்த சூலை நோய்க்கு வைத்தியம் காண முடியவில்லை என்ற குறிப்பு இங்கே உணர்த்தப்படுகிறது.</p><p align="JUSTIFY">நான்காம் திருமுறையில் முதல் பதிகமாகிய இந்தப் பதிகம், கூற்று என்ற சொல்லுடன் தொடங்குகிறது. சம்பந்தப் பெருமான் தனது முதல் பதிகத்தை அருளுவதற்கு முன்னர், சிவபெருமான் உமையம்மையுடன் இடபத்தின் மீது அவருக்குக் காட்சி கொடுக்கிறார். சுந்தரரை சிவபெருமான் ஆட்கொண்டவுடன், திருவெண்ணெய்நல்லூர் திருக்கோயிலின் முன்னர், வானத்தில் காட்சி கொடுத்தார். இவர்கள் இருவருமே இறைவனின் காட்சி கிடைக்கப்பெற்ற பின்னர், தேவாரப் பதிகங்கள் இயற்றத் தொடங்கியமையால், தோடுடைய செவியன் என்றும் பித்தா பிறைசூடி என்றும் இறைவனின் பெயருடன் தங்கள் முதல் பாடலை தொடங்கினார்கள் போலும். ஆனால், கொடுமையான வயிற்று வலியால் துடித்தபடி, மருத்துவம் ஏதும் பலன் அளிக்காத நிலையில் இறைவனை நோக்கித் தனது வயிற்று வலி தீர்க்கப்பட வேண்டிய அப்பர் பிரான், வயிற்று வலி மிகவும் கடுமையாக உள்ளது என்பதை உணர்த்தும் வகையில், கூற்றுவன் வருத்துவதுபோல் சூலை நோய் வருத்துகிறது என்று சொல்வது மிகவும் இயற்கையாக உள்ளது. கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றிய சிவபெருமான்தான் தன்னைக் காப்பாற்ற முடியும் என்பதை குறிப்பால் உணர்த்துகிறார்.</p><p align="JUSTIFY">வாகீச கலாநிதி கி.வா.ஜ. அவர்கள், இந்தப் பாடல் சிவபெருமானுக்கும் அப்பருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்போல் காணப்படுகிறது என்று தனது திருமுறை மலர்கள் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஒரு கடுமையான நோயினால் வருந்தும் நோயாளி ஒருவன் மருத்துவரிடம் செல்லும்போது, நோயின் கொடுமை காரணமாக, இந்த நோய் கூற்றுவன் என்னை வருத்துவதைப் போன்று உள்ளது என்பான். வயிற்று வலியால் வருந்தும் அவனிடம், மருத்துவர் நீ என்ன சாப்பிட்டாய் என்று முதலில் கேட்பார். அதற்கு அவன் என்னென்னவோ உட்கொண்டேன்; எதனால் இந்த வலி வந்தது என்று தெரியவில்லை என்பான். இனிமேல் நீங்கள் சொல்வதையே உட்கொள்வேன் என்பான்; அதேபோன்று, அப்பர் பிரானும் சிவபெருமானிடம், ஐயனே நான் பல தவறுகள் செய்திருக்கின்றேன்; என்னவென்று அறியேன்; இனிமேல் உன்னை இரவும் பகலும் வணங்குவேன்; என்று கூறுவது, அவர் சிவபெருமானிடம் நேரிடையாக உரையாடுவதுபோல் உள்ளது.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">கெடில நதிக்கரையில் உள்ள அதிகை வீரட்டானத்தில் அமர்ந்திருக்கும் சிவபெருமானே, கூற்றுவன்போல் என்னை வருத்தும் இந்த சூலை நோயினை விலக்காமல் இருக்கின்றீர்களே, உமது பெருமையை அறியாமல் நான் பல கொடுமைகள் செய்துள்ளேன். என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டுள்ள இறைவனே, நான் உம்மை இன்றையிலிருந்து எப்போதும், இரவும் பகலும், உமது நினைவினின்று பிரியாமல் வணங்குவேன். வெளியே தோன்றாது, எப்படி வந்தது என்று எவராலும் உணரமுடியாத இந்த சூலை நோய், எனது வயிற்றின் உள்ளே புகுந்து எனது குடலினை சுருட்டி, மற்ற உறுப்புகளையும் செயல்படவிடாமல் முடக்கியுள்ளது. இந்த சூலை நோய் அளிக்கும் துன்பத்தினை என்னால் பொறுக்க முடியவில்லை.</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை சிற்றுண்டி திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

