/

36. வீறு தானுடை வெற்பன் - பாடல் 8

நாரையூர் வீற்றிருக்கும் அன்பனாகிய

Updated On :16 செப்டம்பர் 2016, 9:40 am

பாடல் 8


    என்பு பூண்டு எருது ஏறி இளம்பிறை
    மின் புரிந்த சடை மேல் விளங்கவே
    நன்பகல் பலி தேரினும் நாரையூர்
    அன்பனுக்கு அது அம்ம அழகிதே



விளக்கம்

வீடுதோறும் சென்று பிச்சை எடுப்பவர்கள் பொதுவாக இரவில் பிச்சை எடுப்பதையே நாம் காண்கின்றோம். ஆனால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட பெருமான் நண்பகலில் பிச்சை எடுப்பதையே தனது வழக்கமாகக் கொண்டுள்ளதை பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. பெருமான் பிச்சை எடுப்பது தான் உண்டு மகிழ்வதற்காக அல்ல என்பதையும், உலகில் உள்ள உயிர்கள் உய்வதன் பொருட்டு அவர்கள் தங்களின் மலங்களை பெருமானிடம் ஒப்படைத்து, மலங்கள் நீங்கப்பெற்று முக்தி நிலை அடைய வேண்டும் என்ற பெருமானின் ஆசை தான் காரணம் என்பதையும் நாம் அறிவோம். இவ்வாறு பெருமான் கருணை வயத்தராகி மன்னுயிர்கள் உய்வதன் பொருட்டு, பலி ஏற்கத் திரிவது இந்தப் பாடல் மூலம் உணர்த்தப்படுகின்றது.


பொழிப்புரை
எலும்பினை ஆபரணமாக அணிந்து, எருதின் மீதேறி, இளம்பிறைச் சந்திரனை, மின்னல் போன்று ஒளி மிளிரும் முறுக்கான சடையின் மீது அணிந்து, நண்பகலில் பல இல்லங்கள் சென்று, பெருமான் பிச்சை கேட்கின்றார்.

நாரையூர் வீற்றிருக்கும் அன்பனாகிய பெருமானுக்கு இந்த செயல் எந்த விதத்திலும், இழிவினை ஏற்படுத்தாமல், அவருக்கு அழகினைச் சேர்ப்பது மிகவும் வியப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.