ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

72. பாசம் ஒன்றிலராயினும் - பாடல் 1

கொள்ள வேண்டிய

Updated On :6 ஜனவரி 2018, 9:32 am

முன்னுரை:

திருவாவடுதுறை சென்று அங்கே பல நாட்கள் தங்கி, உழவாரப் பணிகள் செய்தவாறு பல பதிகங்கள் பாடி அருளிய அப்பர் பிரான், பின்னர் இடைமருது சென்றதாக பெரிய புராணம் கூறுகின்றது. சத்திமுற்றம் செல்லும் முன்னர் பழையாறை சென்றதாக இந்த பாடல் நமக்கு தெரிவிக்கின்றது. ஆனால் பழையாறு தலத்தின் மீது அப்போது அருளிய பதிகம் நமக்கு ஏதும் கிடைக்கவில்லை. தலையெலாம் என்று தொடங்கும் பழையாறை வடதளி பதிகம், திருமறைக்காட்டிலிருந்து ஆவடுதுறை வழியாக, இரண்டாம் முறையாக பழையாறை வந்த போது அருளிய பதிகமாகும்.  
  
   எறிபுனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி
                          இடைமருதைச் சென்று எய்தி அன்பினோடு
    மறிவிரவு கரத்தாரை வணங்கி வைகி வண்டமிழ்ப்
                           பாமாலை மகிழச் சாத்திப்
    பொறி அரவம் புனைந்தாரத் திருநாகேச்சரத்துப்
                          போற்றி அரும் தமிழ் மாலை புனைந்து போந்து 
    செறி விரவு மலர்ச் சோலை பழையாறை எய்தித்
                          திருச்சத்திமுற்றத்தைச் சென்று சேர்ந்தார்.

இடைமருது தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய ஐந்து பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. காடுடை என்று தொடங்கும் நேரிசைப் பதிகம் (4.35), பாசம் ஒன்று இலராய் என்று தொடங்கும் குறுந்தொகைப் பதிகம் (5.14), பறையின் ஓசையும் என்று தொடங்கும் குறுந்தொகைப் பதிகம் (5.15), சூலப் படை உடையார் என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகம் (6.16), மற்றும்  ஆறு சடைக்கு அணிவர் என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகம் (6.17) என்பன இந்த ஐந்து பதிகங்கள்.  

பாடல் 1:
    பாசம் ஒன்று இலராய்ப் பல பத்தர்கள்
    வாச நாண்மலர் கொண்டு அடி வைகலும்
    ஈசன் எம் பெருமான் இடை மருதினில் 
    பூச நாம் புகுதும் புனல் ஆடவே

 


விளக்கம்:
நாண்மலர்=அன்றைய நாளில் பூத்த மலர்; பாசம்=உலகப் பொருட்களின் மீதும் உலகத்தில் உள்ள உயிர்களின் மீதும் கொண்டுள்ள விருப்பம்; பூச=தைப் பூச நாள்; தை மாதம் பூச நாளன்று காவிரி நதியில் நீராடுதல் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. வைகலும்= தினமும்; பத்தர்=பத்து சிறந்த குணங்களை கொண்ட அடியார்கள். சிவனடியார்கள் கொள்ள வேண்டிய குணங்கள் அக குணங்கள் என்றும் புற குணங்கள் என்றும் வகைப் படுத்தப் பட்டுள்ளன. பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்திருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும் 

பொழிப்புரை:
உலகப் பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் நிலையற்றவை என்பதை உணர்ந்து, அவற்றின் மீது தாங்கள் முன்னம் வைத்திருந்த பாசங்களை நீக்கியவராக உள்ள பத்தர்கள், இடைமருது தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது அன்பு உடையவர்களாக, அன்று மலர்ந்த மலர்களை இறைவனின் திருப்பாதங்களில் தூவி, இறைவனை வணங்கி நாள்தோறும் வழிபடுகின்றார்கள். இவ்வாறு சிறப்பான அடியார்களால் வணங்கப்படும், இடைமருது இறைவனை நாமும் வணங்கி, அருகிலுள்ள காவிரி நதியில் தைப்பூச நாளில் நீராடி பயன் அடைவோமாக.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.