புற்றில் ஆடரவு ஆட்டும் புனிதனார்
தெற்றினார் புரம் தீயெழச் செற்றவர்
சுற்றினார் மதில் சூழ் மணஞ்சேரியார்
பற்றினார் அவர் பற்றவர் காண்மினே
விளக்கம்
தெற்றினார் = பல நகரங்களை அழித்த திரிபுரத்து அரக்கர்கள். பறக்கும் கோட்டைகளில் பறந்துசென்று, பல ஊர்களை தங்களது கோட்டைகளின் அடியில் அழுத்தி, அழித்த செய்கை இங்கே குறிப்பிடப்படுகின்றது.
நாம் அனைவரும் உலகப் பொருட்களின் (அதில் உள்ள பல உயிர்கள் உட்பட) மீது பற்று வைத்தவர்களாக உள்ளோம். அந்தப் பற்றினை பாசவலையை விட்டு வெளியே வந்தால்தான், அத்தகைய பாசத்தால் ஏற்படும் வினைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். பிறப்பினை தவிர்ப்பதற்கு வினைகளை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இதனையே வள்ளுவப் பெருந்தகை பற்றினை அறுத்தால் பிறப்பினை அறுக்கமுடியும் என்றும் அல்லையேல் இன்ப துன்பங்களை உயிர்கள் மாறி மாறி நுகர வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறுகின்றார். நிலையாமை என்று நிலையற்ற இன்ப துன்பங்கள் குறிப்பிடப்படுகின்றன.
பற்றற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் மற்று
நிலையாமை காணப்படும்.
பற்றினை அறுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இப்பொழுது எழுகின்றது. இதற்கு விடை வள்ளுவரால் அடுத்த குறளில் தரப்படுகின்றது. எதிலும் பற்று இல்லாதவனாக இருக்கும் இறைவனை நாம் பற்றிக்கொண்டால், அந்தப் பற்று மற்ற பொருட்களின் மீது நான் வைத்துள்ள பற்றினை அறுப்பதற்கு உதவும். இயல்பாகவே பற்றினை அறுத்த ஒருவனால் தானே, நாம் கொண்டுள்ள பற்றினை அறுப்பதற்கு உதவ முடியும். எனவேதான் இறைவனின் பற்று அறுத்த தன்மை இங்கே முதலில் குறிப்பிடப்.
பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
இந்த இரண்டு குறட்பாக்களில் காணப்படும் செய்தியினை உணர்த்தும் முகமாக அப்பர் பிரான் இந்த பாடலில் இறைவனைப் பற்றுமாறு அறிவுரை கூறுகின்றார். அவ்வாறு பற்றும் அடியார்களுக்கு, இறைவன் வீடுபேற்றினை அளிக்கும் பற்றுக்கோடாக இருக்கும் தன்மையும் இங்கே உணர்த்தப்படுகின்றது. இந்த பாடல் இறைவன் அடியார்களைக் காத்தருளும் பாங்கினை உணர்த்துகின்றது.
பொழிப்புரை
புற்றில் மறைந்து வாழும் பாம்பினை, தனது இடுப்பில் கட்டி, அதனை ஆட்டும் புனிதரும், பல ஊர்களை அழித்து உலகத்தவரை துன்புறுத்திய திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை தீயினில் வெந்து சாம்பலாகுமாறு கோபம் கொண்டு அழித்தவரும், சுற்றிலும் மதில்களால் சூழப்பட்ட மணஞ்சேரி தலத்தில் உறைபவரும் ஆகிய, இறைவனைப் பற்றும் அடியார்களுக்கு. இறைவன் சிறந்த பற்றுக்கோடாகத் திகழ்ந்து அவர்களுக்கு வீடுபேற்றினை அளிப்பதை, நீங்கள் கண்டு உணர்வீர்களாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

